கோவை துடியலூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுவதற்கு ஒரு தரப்பினர் தங்களை அனுமதிக்காமல் பிரச்சினை செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி ஒரு பெண் உட்பட மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான முனீர், ஓம் முருகா, பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் கோவை துடியலூர் பகுதியில் ஆட்டோ ஓட்டி தொழில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள சக ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்கள் மீது மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், தீண்டாமையை கடைப்பிடித்து தங்களை ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதிக்காமல் தொடர்ந்து பிரச்சினை கொடுத்து வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி திடீரென கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்த ஆட்டோ ஓட்டுநரின் தாய் உட்பட ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேரும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைக் கண்ட காவலர்கள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி மூன்று பேரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

திண்டுக்கல்லில் கிணறு வெட்டும்போது வெடி விபத்து; உடல் சிதறி ஒருவர் பலி

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத்தினர், குழந்தைகளின் பள்ளிச் செலவிற்கு கூட வழியில்லாத நிலையில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த மற்ற ஆட்டோ ஓட்டுநர்களின் அழுத்தம் எங்களை மேலும் மன வேதனைக்கு உள்ளாக்குவதாக வேதனை தெரிவித்தனர். திடீரென ஆட்சியர் அலுவலகம் முன் நிகழ்ந்த இத்தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இளம் பெண்ணுக்கு கடன் கொடுத்து உதவுவது போல் பாலியல் தொல்லை: விஏஓ கைது