அரையிறுதிக்கு தகுதி பெறும் அணி எது? ஸ்வீடனா? இங்கிலாந்தா? இன்று தெரியும்...
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்வீடன் - இங்கிலாந்து மோதும் காலிறுதி ஆட்டங்களில் வெல்லப்போகும் அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்வீடன் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் சமாராவில் இன்று இரவு நடக்கிறது.
இந்த ஆட்டம் இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெறும் 25-வது ஆட்டமாகும். இதில், இங்கிலாந்து 8, ஸ்வீடன் 7 முறையும் வென்றுள்ளன. 9 ஆட்டங்கள் சமனில் முடிந்தன.
அதேநேரத்தில் உலகக் கோப்பையில் 2002, 2006-ல் இரு அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1966-ல் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி தற்போது கேப்டன் ஹாரி கேன் தலைமையில் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது.
தகுதி ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி, பெனால்டி ஷூட் ஔட் முறையில் 30 ஆண்டுகள் சாபத்தையும் போக்கி, நாக் ஔட் சுற்றில் கொலம்பியாவை வென்றது. இதனால் இந்தமுறை சாம்பியன் கோப்பையை வெல்ல முடியும் என்ற உத்வேகத்தில் அந்த அணி உள்ளது.
அதேநேரத்தில் ஸ்வீடன் அணிக்கு பெரிய அணிகளை வீழ்த்திய அனுபவம் ஏராளம் உள்ளது. தகுதி ஆட்டங்களில் வலிமை வாய்ந்த இத்தாலி, நெதர்லாந்து அணிகளை வெளியேற்றி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
அதன் தற்காப்பு டெக்னிக் பலம் சேர்க்கிறது. இரு அணிகள் இடையிலான இன்றைய ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.