விவாகரத்தா.. யாரு சொன்னா? தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் இணையும் சானியா மிர்சா - ஷோயப் மாலிக் தம்பதி
சானியா மிர்சா - ஷோயப் மாலிக் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் பரவிவந்த நிலையில், இருவரும் இணைந்து மிர்சா - மாலிக் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த விளையாட்டு வீரரும் வீராங்கனையும் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பாக இருந்தது. இருவரும் காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 2018ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், அண்மையில் சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, சானியா - ஷோயப் மாலிக் ஜோடியின் பிரிவை உணர்த்தும் சமிக்ஞையாக இருந்தது. “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண” என்று பதிவிட்டிருந்தார். ஷோயப் மாலிக்கை பிரிந்திருக்கும் சானியா மிர்சாவின் இந்த பதிவு விவாகரத்து சர்ச்சையை எழுப்பியது.
சானியா மிர்சா - ஷோயப் மாலிக் தம்பதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாகவும், அவர்களது மகனுக்கு பெற்றோராக இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்திருந்தது.
ஷோயப் மாலிக் பாகிஸ்தானின் பிரபல நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதை சானியா மிர்சா கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனால் தான் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. பாகிஸ்தானின் பிரபல மாடலும் நடிகையுமான ஆயிஷா ஓமருடன் கடந்த ஆண்டு நெருக்கமாக ஒரு ஃபோட்டோஷூட்டில் ஷோயப் மாலிக் கலந்துகொண்டார். அந்த ஃபோட்டோக்களில் ஷோயப் மாலிக்கும் ஆயிஷாவும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். அந்த ஃபோட்டோஷூட்டுக்கு பின்னர் இருவரும் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதாகவும், அது தெரிந்துதான் சானியா மிர்சா ஷோயப் மாலிக்கை பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவல் இரு நாட்டு விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் வேதனையாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் தொலைகாட்சி ஒன்றில் மிர்சா - மாலிக் என்ற நிகழ்ச்சியை இருவரும் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சானியா மிர்சா - ஷோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்றுவிட்டதாக தகவல் பரவிய நிலையில், இருவரும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.