இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடக்காதது வருத்தமளிக்கறது : முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கவலை!
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்தியா மறுத்துவருவது ஏமாற்றமளிப்பதாக இன்சமாம் உல் ஹக் கவலை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவராகப் பதவி வகித்துவரும் இன்சமாம் உல் ஹக், அந்நாட்டின் தேசிய அணிக்குக் கேப்டனாகப் பதவி வகித்தவர். இதுதொடர்பாக கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இன்சமாம், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் இருநாட்டு ரசிகர்களுக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்ததே என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இருநாடுகள் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடக்கவில்லை. பாகிஸ்தானுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்தியா தொடர்ந்து மறுத்து வருவது ஏமாற்றமளிப்பதாகவும் இன்சமாம் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு சீசனில் இந்திய அணி சொந்தமண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது; அதேநேரம் பாகிஸ்தானில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிகெட் போட்டிகள் நடக்கவில்லை என்று இன்சமாம் தெரிவித்தார். இருப்பினும் தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகின் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை பெற்றிருப்பதாகவும் இன்சமாம் தனது பதிலில் குறிப்பிட்டார்.