அரிய வாய்ப்பை அம்போனு விட்ட அம்பாதி ராயுடு!!
யோ யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால், இங்கிலாந்து தொடரிலிருந்து அம்பாதி ராயுடு விலகியுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த கிரிக்கெட் வீரரான அம்பாதி ராயுடுவிற்கு வயது 32. கடந்த 15 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் ராயுடு, இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். கடைசியாக 2016ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்தார். அதற்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக ஆடிய ராயுடு, எந்த வரிசையில் களமிறக்கினாலும் அதிரடியாக ஆடி மிரட்டினார். 16 போட்டிகளில் ஆடி 602 ரன்களுடன், இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் நான்காமிடத்தை பிடித்தார்.
ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதால், ராயுடுவிற்கு மீண்டும் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒருநாள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டு ஆண்டுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுள்ளார் ராயுடு. இங்கிலாந்துக்கு எதிராக ஆடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் உடற்தகுதியை பரிசோதிக்கும் யோ யோ டெஸ்ட், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்றது. இந்த டெஸ்டில் ராயுடு தேர்ச்சி பெறவில்லை. அதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து ராயுடு விலகியுள்ளார்.
தோனி, கோலி ஆகியோர் யோ யோ டெஸ்டில் தேறிவிட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பை ராயுடு தவறவிட்டார். உலக கோப்பை அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள நிலையில், இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடியிருந்தால், உலக கோப்பை ஒருநாள் அணியில் இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்பு கூட கிடைத்திருக்கும். ஆனால் அந்த அரிய வாய்ப்பையும் ராயுடு நழுவவிட்டார். ராயுடுவிற்கு பதிலாக ரஹானே அணியில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.