மகளிர் டி20 உலக கோப்பை: அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்று தொடரை விட்டு வெளியேறிய இந்தியா
மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்திய மகளிர் அணி தொடரை விட்டு வெளியேறியது.
மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யஸ்டிகா பாட்டியா, ஸ்னே ராணா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், ரேணுகா சிங்.
ஒரு கேப்டன் இப்படி தொந்தியும் தொப்பையுமா இருக்கலாமா..? அசிங்கமா இல்ல..? ரோஹித்தை விளாசிய கபில் தேவ்
ஆஸ்திரேலிய மகளிர் அணி:
அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகான் ஸ்கட், டார்ஸி பிரௌன்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் பெத் மூனி மற்றும் அலைஸா ஹீலி இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுகு 7.3 ஓவரில் 52 ரன்களை சேர்த்தனர். அலைஸா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட்டிங் ஆடிய பெத் மூனி அரைசதம் அடித்தார். பெத் மூனி 37 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் கேப்டன் லானிங் பொறுப்புடன் பேட்டிங் ஆடி 34 பந்தில் 49 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். ஆஷ்லே கார்ட்னெர் 18 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 172 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
173 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா (9) மற்றும் ஸ்மிரிதி மந்தனா(2) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 3ம் வரிசையில் இறங்கிய யஸ்டிகா பாட்டியா 4 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் அடித்தார்.
அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 34 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் அடித்து அவரும் தனது கடமையை செய்து முடிக்காமல் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரிச்சா கோஷ்(14), தீப்தி ஷர்மா(20), ஸ்னே ராணா(11) ஆகியோர் சிறு சிறு பங்களிப்பு செய்து கடைசிவரை போராடியும் 20 ஓவரில் இந்திய மகளிர் அணி 167 ரன்கள் மட்டுமே அடித்தது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடுமையாக போராடி 5 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி தொடரைவிட்டு வெளியேறியது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது.
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது அரையிறுதி போட்டியில் ஜெயிக்கும் அணி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.