Ranji Trophy: சௌராஷ்டிராவை வீழ்த்தி தமிழ்நாடு அணி ஆறுதல் வெற்றி..! காலிறுதி போட்டி விவரம்
ரஞ்சி தொடரில் சௌராஷ்டிராவிற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
ரஞ்சி தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்கிறது. காலிறுதிக்கு முன்னேறாத தமிழ்நாடு அணி கடைசி லீக் போட்டியில் சௌராஷ்டிரா அணியை எதிர்த்து ஆடியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்கள் அடித்தது. பாபா இந்திரஜித் அதிகபட்சமாக 66 ரன்கள் அடித்தார். மேலும் விஜய் சங்கர் (53) மற்றும் ஷாருக்கான் (50) ஆகிய இருவரும் அரைசதம் அடிக்க, முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 324 ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய சௌராஷ்டிரா அணி வெறும் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. சிராக் ஜானி அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார். தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக அஜித் ராம் மற்றும் சித்தார்த் மணிமாறன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணி, ஜடேஜாவின் சுழலில் வெறும் 133 ரன்களுக்கு சுருண்டது. அபாரமாக ஆடிய ஜடேஜா அதிகபட்சமாக 7 விக்கெட் வீழ்த்தி அசத்த, தமிழ்நாடு அணி 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மொத்தமாக 265 ரன்கள் தமிழ்நாடு அணி முன்னிலை பெற, 266 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சௌராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ஹர்விக் தேசாய் சதமடித்தும் கூட(101) அந்த அணியில் மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் 206 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டாக, 59 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. 2வது இன்னிங்ஸில் தமிழ்நாடு பவுலர் அஜித் ராம் அதிகபட்சமாக 6 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிவிட்ட தமிழ்நாடு அணிக்கு இது வெறும் ஆறுதல் வெற்றிதான். ஆனால் இந்த போட்டியில் தோற்றிருந்தாலும் கூட, சௌராஷ்டிரா அணி ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறிவிட்டது.
ஜனவரி 31ம் தேதி காலிறுதி போட்டிகள் தொடங்குகின்றன. காலிறுதி சுற்றில், மத்திய பிரதேசம் - ஆந்திரா, சௌராஷ்டிரா - பஞ்சாப், பெங்கால் - ஜார்க்கண்ட், கர்நாடகா - உத்தரகண்ட் அணிகள் மோதுகின்றன.