ராகுல் டிராவிட், லட்சுமணன், கும்ப்ளேவின் மன உறுதியை சுட்டிக்காட்டி மாணவர்களை ஊக்கப்படுத்திய பிரதமர் மோடி
மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சியில், ராகுல் டிராவிட், லட்சுமணன், அனில் கும்ப்ளே ஆகிய கிரிக்கெட் வீரர்களை சுட்டிக்காட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் மோடி. டெல்லியில் உள்ள தல்கதோரா ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் பெற்ற இந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் டிராவிட்டும் லட்சுமணனும் இணைந்து அபாரமாக ஆடி, இந்திய அணியை மீட்டெடுத்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்ததையும் 2002ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட்டில் தாடையில் அடிபட்ட நிலையில், கட்டு போட்டுக்கொண்டு பந்துவீசிய அனில் கும்ப்ளேவையும் சுட்டிக்காட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
Also Read - அண்டர் 19 உலக கோப்பை.. இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, 2001ல் இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நினைவிருக்கிறதா..? அந்த போட்டியில் இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் ராகுல் டிராவிட்டும் விவிஎஸ் லட்சுமணனும் இணைந்து ஆடிய விதத்தை நம்மால் மறக்க முடியாது. ஆட்டத்தையே புரட்டிப்போட்டது அவர்களது இன்னிங்ஸ்.
Also Read - அபினவ் முகுந்த் அபார சதம்.. சுழலில் அசத்திய சாய் கிஷோர்.. தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் வெற்றி
அதேபோல, 2002ல் காயமடைந்து கட்டுப்போட்ட நிலையிலும் பந்துவீசினார் அனில் கும்ப்ளே. கும்ப்ளேவிற்கு அடிபட்டு முகத்தில் கட்டு போடப்பட்டிருந்தது. அந்த நிலையில், அவர் பந்துவீசவில்லையென்றால், அவரை யாரும் குறைகூறவே மாட்டார்கள். ஆனாலும் நாட்டுக்காக, கட்டுடன் வந்து பந்துவீசி பிரயன் லாராவின் விக்கெட்டை எடுத்தார் கும்ப்ளே. அந்த விக்கெட் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கும்ப்ளேவின் அந்த மன உறுதிதான் மற்றவர்களுக்கு மிகச்சிறந்த ஊக்குவிப்பு என்று டிராவிட், லட்சுமணன், கும்ப்ளேவின் மன உறுதியை சுட்டிக்காட்டி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.