அபினவ் முகுந்த் அபார சதம்.. சுழலில் அசத்திய சாய் கிஷோர்.. தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் வெற்றி
ரஞ்சி போட்டியில் ரயில்வேஸ் அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாடு மற்றும் ரயில்வேஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ரயில்வேஸ் அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 76 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணியின் சார்பில் மணிமாறன் சித்தார்த் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் அபினவ் முகுந்த் அபாரமாக ஆடி சதமடித்தார். சரியாக 100 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். அணியின் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் பாபா இந்திரஜித் ஆகிய இருவருமே தலா 58 ரன்கள் அடித்தனர். அபினவ் முகுந்த்துடன் தொடக்க வீரராக இறங்கிய சூர்யபிரகாஷும் அரைசதம் அடித்தார். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்களை குவித்தது.
254 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ரயில்வேஸ் அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர்கள் இருவரையும் டி.நடராஜன் வீழ்த்த, அடுத்த மூன்று விக்கெட்டுகளையும் அஷ்வின் வீழ்த்தினார். எஞ்சிய 5 விக்கெட்டுகளையுமே சாய் கிஷோர் வீழ்த்த, அந்த அணி வெறும் 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
சாய் கிஷோர் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.