குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு ஐபிஎல் 2026 போட்டிகளின் மைதானங்கள் மாற்றப்பட்டுள்ளன.
ஐபிஎல் 2026 தொடரின் அட்டவணையில் ஒரு முக்கிய மாற்றத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின்படி, குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகளின் இடங்கள் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளன.
அகமதாபாத் மற்றும் குஜராத்தின் பிற பகுதிகளில் ஏப்ரல் 26, 2026 அன்று மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலில் திட்டமிட்டபடி, ஏப்ரல் 26-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடைபெற இருந்தது.
சிஎஸ்கே போட்டி திடீர் மாற்றம்
இப்போது, அந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தப் போட்டி மதியம் 3:30 மணிக்குத் தொடங்கும். அதேபோல, மே 21-ம் தேதி சென்னையில் நடக்கவிருந்த CSK மற்றும் GT அணிகளுக்கு இடையேயான போட்டி, இப்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தப் போட்டி இரவு 7:30 மணிக்குத் தொடங்கும் என BCCI வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவழியாக வெற்றி பெற்ற சிஎஸ்கே
தற்போதைய நிலவரப்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 2 தோல்வி) ஐந்தாவது இடத்தில் உள்ளது. லக்னோவில் நடந்த கடைசிப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை குஜராத் வீழ்த்தியது. மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடர் மூன்று தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சேப்பாக்கத்தில் நடந்த கடைசிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ரோகித் சர்மா புதிய சாதனை
இதற்கிடையே நேற்று ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். ஐந்து முறை சாம்பியனான மும்பை அணிக்காக 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்த போட்டியின் மூலம், ரோஹித் சர்மா மும்பை அணிக்காக 231 போட்டிகளில் விளையாடி, 29.76 சராசரி மற்றும் 132.82 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 6013 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 40 அரைசதங்களும், இரண்டு சதங்களும் அடங்கும். ரோஹித்துக்கு அடுத்தபடியாக, சூர்யகுமார் யாதவ் 3809 ரன்களுடன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 276 போட்டிகளில் 7183 ரன்கள் எடுத்துள்ளார். RCB-யின் கிங் கோலி, 271 போட்டிகளில் 8840 ரன்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.


