ENG vs IND: இந்திய அணி நிர்வாகத்தின் இந்த துணிச்சலான முடிவு பலன் தந்தது.. பாராட்டியே தீரணும்
இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் இந்திய அணி நிர்வாகத்தின் துணிச்சலான முடிவு பலனளித்துள்ளது. அந்த முடிவிற்காக அணி நிர்வாகத்தை பாராட்டியே தீரவேண்டும்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 98 ரன்களுக்கே கோலி, புஜாரா, கில், விஹாரி, ஷ்ரேயாஸ் ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது இந்திய அணி.
இதையும் படிங்க - அப்போ யுவராஜ்.. இப்போ பும்ரா..! இந்திய வீரர்களால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசிங்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட்
அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர். 89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் அபாரமாக ஆடினாலும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவருடன் இணைந்து ஜடேஜா ஆடிய இன்னிங்ஸ் மிக முக்கியமானது.
ரிஷப் பண்ட்டை தொடர்ந்து ஜடேஜாவும் சதமடித்தார். 104 ரன்களை குவித்து ஜடேஜா ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் - ஜடேஜாவின் சதங்கள் தான் இந்திய அணி 400 ரன்களை கடக்க உதவியது. கடைசி நேரத்தில் பும்ரா 31 ரன்கள் பங்களிப்பு செய்ய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை எடுக்காமல் ஜடேஜாவை ஆடவைத்தது அணி நிர்வாகம். அஷ்வினும் நன்றாக பேட்டிங் ஆடுவார். ஆனால் ஜடேஜாவை விட அஷ்வின் சிறந்த ஸ்பின்னர். அஷ்வின் பேட்டிங்கிலும் சதங்களை விளாசியிருக்கிறார். பவுலிங்கை பொறுத்தமட்டில் ஜடேஜாவை விட சிறந்தவர் என்ற முறையில் அஷ்வினை எடுத்திருக்கலாம். ஆனால் ஜடேஜாவின் பேட்டிங் மீது நம்பிக்கை வைத்து அஷ்வினை விட அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த பும்ரா சாதனை..! லாராவின் சாதனையை தகர்த்து வரலாறு
கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போதே, அஷ்வினை ஆடவைக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அப்படியிருக்கையில், எதிர்மறையான போட்டி முடிவை பெறும்பட்சத்தில் அஷ்வினை சேர்க்காதது விமர்சனத்துக்குள்ளாகும். ஆனால் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல், இங்கிலாந்தை பொறுத்தமட்டில் ஃபாஸ்ட் பவுலர்கள் தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எனவே ஸ்பின்னரை பொறுத்தமட்டில் நன்றாக பேட்டிங் ஆடத்தெரிந்த ஸ்பின்னரை ஆடவைப்பதே போதுமானது என்று தீர்மானித்து ஜடேஜாவை ஆடவைத்தனர்.
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான அணி நிர்வாகத்தின் முடிவு சரியானதுதான் என்பதை நிரூபித்துவிட்டார் ஜடேஜா. தனது சேர்க்கைக்கு சதத்தின் மூலம் அர்த்தம் சேர்த்துவிட்டார்.