நான் லண்டனில் இங்கிலாந்து கேப்டனாக விளையாடியபோதெல்லாம் என்னை வீரராக உருவாக்கியது இந்த இடம் தான் என்பதை நினைப்பேன் என்று நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து நாட்டில் சிறந்து விளங்கிய கேப்டன்களில் ஒருவர் நாசர் ஹுசைன். 1999 முதல் 2003 வரை இங்கிலாந்து அணியை வழிநடத்திய நாசர் ஹுசைன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தார். பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரனான நாசர் ஹுசைன் நமது சிங்கார சென்னையில் பிறந்தவர் என்று உங்களுக்கு தெரியுமா?
சென்னையில் பிறந்த நாசர் ஹுசைன்
ஆம்.. நாசர் ஹுசைன் 1968ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி சென்னையில் (அப்போது மெட்ராஸ் என அழைக்கப்பட்டது) பிறந்தார். இவரது தந்தை இந்தியர். தாய் ஆங்கிலேயர். இவரது தந்தை ஜோ ஹுசைன் சிறந்த கிரிக்கெட் வீரராக விளங்கினார். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். மேலும் சென்னையில் புகழ்பெற்ற மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் உறுப்பினராகவும் இருந்தார்.

இங்கிலாந்து கேப்டன் டூ வர்னணையாளர்
1968ம் ஆண்டு பிறந்த நாசர் ஹுசைன் தனது தொடக்க கல்வியை மயிலாப்பூரில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளியில்தான் படித்தார். தந்தை கிரிக்கெட் வீரர் என்பதால் நாசர் ஹுசைன் இங்கிலாந்து கேப்டனாக உச்சம் தொட இங்கு இருந்தே அவர் அடித்தளம் அமைத்தார். தனது 7 வயதில் சென்னையில் இருந்து சென்ற நாசர் ஹுசைன் இங்கிலாந்து கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து, ஓய்வுக்கு பிறகு சிறந்த வர்னணையாளராக விளங்கி வருகிறார்.
தினேஷ் கார்த்திக்கு அளித்த பேட்டி
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தியா, ஜிம்பாப்வே போட்டிக்கு வர்ணனை செய்ய வந்த நாசர் ஹுசைன், இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்திக்கு அளித்த பேட்டியில் தான் சென்னையின் பையன் என்றும் சென்னையில் பிறந்து இங்கிலாந்து கேப்டனாக உச்சம் தொட்டதை பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.
சென்னையின் பசுமையான நினைவுகள்
இது தொடர்பாக தினேஷ் கார்த்திக்குக்கு அளித்த பேட்டியில் பேசிய நாசர் ஹுசைன், ''நான் கடந்த 1968ம் ஆண்டு சென்னையில் பிறந்தேன். 1975ம் ஆண்டு எனது குடும்பம் இங்கிலாந்து சென்றது. நான் சிறு குழந்தையாக 7 ஆண்டுகளே சென்னையில் இருந்தாலும் சில நினைவுகள் உள்ளன. நான் பெல் நர்சிங் ஹோமில் தான் பிறந்தேன்.
சந்தோம், பட்டினப்பாக்கம் ஆகியவை மனதில் உள்ளது. நான் மான்ட்ஃபோர்ட் பள்ளியில் படித்தபோது எனக்கு பேட்ஜ் மாட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. அதை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். அம்மாவும், அப்பாவும் ரொம்ப கண்டிப்பானவர்கள். நான் பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் ஹோம் ஒர்க் எழுத வைத்து விடுவார்கள்.
சென்னையில் நான் ரசித்தது இதுதான்
ஹோம் வொர்க் எழுதிய பிறகு நான் இந்த இடத்துக்கு (சென்னை சேப்பாக்கம் மைதானம்) வருவேன். அப்போது நான் குழந்தையாக இருந்ததால் கிரிக்கெட் விளையாட முடியாது. பவுண்டரிக்கு வெளியே பந்தை பிடித்து விளையாடுவேன். அப்போது இதனை சுற்றி மக்கள் ஓடுவதையும், நடப்பதையும் பார்த்த நினைவுகள் அப்படியே உள்ளன.
நான் லண்டனில் இங்கிலாந்து கேப்டனாக விளையாடியபோதெல்லாம் என்னை வீரராக உருவாக்கியது இந்த இடம் தான் என்பதை நினைப்பேன். நான் சென்னை வரும்பொதெல்லாம் மாலை நேரங்களில் ஈரப்பதம் மிகுந்த காற்றை மிகவும் ரசிப்பேன். சென்னை வெயிலையும் மறக்க முடியாது. எனது அப்பாவுக்கு பூமியில் மிகவும் பிடித்த இடம் இதுதான்'' என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


