அவுங்க என்ன நிராகரிக்கிறது.? மத்திய அரசுக்கு எச்சரிக்கை கொடுங்க முதல்வரே.. ஸ்டாலினை உசுப்பேற்றும் பழ.நெடுமாறன்
குடியரசு நாள் அணி வகுப்பில் பங்கேற்கும் ஊர்திகளைத் தேர்வு செய்யும் குழுதான் இதற்குப் பொறுப்பே தவிர, ஒன்றிய அரசு இதற்குப் பொறுப்பல்ல என அதிகாரி ஒருவர் கூறியிருப்பது பொறுப்பற்றப் போக்காகும்.
குடியரசு நாள் அணி வகுப்பில் பங்கேற்க மறுக்கும் நிலை உருவாகும் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுமாறு தமிழக முதல்வருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் யோசனை கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற உள்ள குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய அலங்கார ஊர்தியை தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஆனால், பலமுறை மாற்றங்களை மத்திய அரசு தெரிவித்து, அதை சரி செய்தபோதும், தமிழக ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது சர்ச்சையாகி இருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மத்திய அரசை கண்டித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “குடியரசு நாள் அணி வகுப்பில் பங்கேற்க தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி அளிக்க ஒன்றிய அரசு மறுத்திருக்கிறது.
தமிழகத்தைச் சேர்ந்த வ.உ.சி., பாரதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் போன்றவர்களின் உருவங்களும், மேற்குவங்கம் ஊர்தியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்தியத் தேசிய இராணுவம் ஆகியோரின் உருவங்களும் இடம்பெற்றிருந்தது அனுமதி மறுக்கப்பட்டிருப்பதற்குக் காரணமாகும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை நான் மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவின் விடுதலையை வென்றெடுக்க அனைத்து மாநில விடுதலைப் போராட்ட வீரர்களும் புரிந்த ஈடு இணையற்ற தியாகம்தான் காரணமாகும். ஏதோ ஒருசில மாநிலங்களின் விடுதலை வீரர்கள் மட்டுமே இந்தியாவின் விடுதலைக்குக் காரணமாகக் கருதும் ஒன்றிய அரசின் போக்கு, விடுதலைக்காகப் போராடிய தியாக வீரர்களை அவமதிக்கும் போக்காகும்.
குடியரசு நாள் அணி வகுப்பில் பங்கேற்கும் ஊர்திகளைத் தேர்வு செய்யும் குழுதான் இதற்குப் பொறுப்பே தவிர, ஒன்றிய அரசு இதற்குப் பொறுப்பல்ல என அதிகாரி ஒருவர் கூறியிருப்பது பொறுப்பற்றப் போக்காகும். இந்தக் குழுவை ஒன்றிய அரசுதான் நியமித்திருக்கிறது. எனவே, குழுவின் செயல்களுக்கு அந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ஒன்றிய அரசின் இந்த தகாதப் போக்குத் தொடருமேயானால், டெல்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணி வகுப்பில் பங்கேற்க மறுக்கும் நிலை உருவாகும் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுமாறு தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.” என்று அ\றிக்கையில் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.