இந்த நேரத்துல ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியது தான் கொடிய மதவாத அரசியல்..! சீறியெழுந்த சீமான்..!
ஊரடங்கு உத்தரவு விடுக்கப்பட்ட அடுத்த நாளே உத்திரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அம்மாநில பாஜக அரசே முன்னின்று அடிக்கல் நாட்டு விழாவில் நடத்தியது தான் நாட்டை பிளக்கும் கூடிய கொடிய மதவாத அரசியல்.
டெல்லியில் இருக்கும் நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தப்லிக் ஜமாத் என்கிற இஸ்லாமிய அமைப்பு இஸ்லாமிய மதகுருக்கள் பங்கேற்ற மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில் தப்லிக் ஜமாஅத் நடத்திய மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியிருக்கும் நிலையில் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால் இந்நிகழ்வு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையெ பிரிவினைவாத அரசியலை இக்கட்டான இத்தருணத்திலாவது கைவிட்டு மதவுணர்வைப் புறந்தள்ளி, துளியளவாவது மனிதத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவியது என்பது எதேச்சையாக கெடுவாய்ப்பாக எதிர்பாராது நிகழ்ந்த ஒரு விபத்து. ஆனால் அதற்கு மதச்சாயம் பூசி இந்த நெருக்கடி கால கட்டத்திலும் மதத் துவேஷம் பேசி பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள முனையும் மதவாதிகளின் இழிவான அரசியல் மனிதத் தன்மையற்றது. அதனை வன்மையாக கண்டிக்கிறேன். 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்த மத்திய அரசு தனது ஆளுகைக்கு உட்பட்டு இருக்கும் டெல்லியில் பல்லாயிரக்கணக்கில் மக்களை கூட விட்டு வீதியில் நடந்தே பயணப்பட வைத்து சமூக விலகலை தகர்த்தும் ஊரடங்கு உத்தரவு விடுக்கப்பட்ட அடுத்த நாளே உத்திரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அம்மாநில பாஜக அரசே முன்னின்று அடிக்கல் நாட்டு விழாவில் நடத்தியதும் தான் நாட்டை பிளக்கும் கூடிய கொடிய மதவாத அரசியல்.
அத்தகைய பிரிவினைவாத அரசியலை இக்கட்டான தருணத்தில் கைவிட்டு மத உணர்வை புறந்தள்ளி துளியளவாவது மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன். அண்ணல் அம்பேத்கர் கூறியதை மீண்டும் சொல்கிறேன் 'உங்களிடம் இருக்கும் இரக்க குணத்தையும் மனிதாபிமானத்தையும் செயல்படுத்த தொடங்குங்கள். இருந்தால் அதை செயல்படுத்தி காட்டுங்கள்'.
இவ்வாறு சீமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.