பழி வாங்குறத விட்டுவிட்டு பொருளாதாரத்தை சரி பண்ணுங்க… மோடியை கிழித்து தொங்கவிட்ட மன்மோகன் சிங் !!
இந்தியாவின் தற்போது பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிரதமர் மோடி பழிவாங்கும் நடவடிக்கைகளை விட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும் என மோடியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி சதவிகிதம் 5.8 லிருந்து 5 ஆக குறைந்துள்ளது. இது பொருளாதார மந்தநிலை இருப்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், அதனை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள முன்னாள் பிரதமரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன் சிங், தற்போது பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடந்த காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதமாக குறைந்திருப்பது இந்தியாவில் நீண்ட நாட்கள் தேக்க நிலை நீடித்ததற்கான ஆதாரமாக உள்ளது.
இந்தியா பொருளாதாரம் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பினும் மோடி அரசின் தவறான முடிவுகள் காரணமாக இந்த பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 0.6 சதவிகிதமாக குறைந்திருப்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. பணமதிப்பழிப்பு மற்றும் அவசரமாய் செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி போன்ற மனிதத் தவறுகள் காரணமாக நமது பொருளாதாரம் மீளமுடியாத நிலையில் உள்ளது. இந்த நிலை நீடிக்கக் கூடாது.
எனவே மோடி அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு பொருளாதாரத்தை மீட்க முயல வேண்டும் என மன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.