மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டாரா? ராஜீவ் சந்திரசேகருக்கு பிரியங்க் கார்கே கொடுத்த பதில்!
வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்யும் போது மல்லிகார்ஜுன கார்கே அறையின் கதவு வழியாக பார்ப்பதாக பாஜக வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கார்கேவை அவமதித்ததாக பாஜக குற்றம் சாட்ட, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கவின் மகன் பிரியங்க் கார்கே பாஜகவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் அறையின் கதவு வழியாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பார்ப்பதைக் காட்டும் வீடியோவை பாரதிய ஜனதா கட்சி புதன்கிழமை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், கார்கேவை அவமரியாதை செய்ததாக காங்கிரஸ் கட்சிக்கு கேள்வி எழுப்பினார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மல்லிகார்ஜுன கார்கே நீங்கள் எங்கே இருந்தீர்கள்? முதல் குடும்பமான பிரியங்கா காந்தி வயநாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்யும் போது வெளியில் இருந்தார். அவர் உங்கள் குடும்பம் அல்ல. சோனியா குடும்பத்தின் ஆணவம் மற்றும் உரிமையின் பலிபீடத்தில் சுயமரியாதை மற்றும் கண்ணியம் பலி கொடுக்கப்பட்டது.
மூத்த தலித் தலைவரையும் கட்சித் தலைவரையும் இப்படி நடத்தினால், வயநாட்டு மக்களை எப்படி நடத்துவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று ராஜீவ் சந்திரசேகர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டிருந்தார். இதற்கு மாறாக, வேட்புமனு தாக்கலின்போது படங்கள், சமூக ஊடக தளங்களில் வைரலானது. அதில் மல்லிகார்ஜுன கார்கே மூத்த காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் அமர்ந்திருப்பதைக் காட்டியது.
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கவின் மகனும், அமைச்சருமான பிரியங்க் கார்கே பதிவை வெளியிட்டுள்ளார். பாஜக ட்ரோல் செய்வதற்கு ரூ.2 கொடுக்கிறீர்களா அல்லது உங்களைப் போன்றவர்களுக்கு அதிகமா? உங்களுக்கு இப்போது இருக்கும் நேரத்தைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச ஊதியத்திற்கு நீங்கள் பேரம் பேசுவீர்கள் என்று நம்புகிறேன்.
உங்களின் வாதத்தின்படி, ஒரு அரசு அதிகாரி, அமர்ந்திருந்த நிலையில் வேட்புமனுவை ஏற்று பாரதத்தின் பிரதமரை அவமதிக்கிறார்? சட்டம் மற்றும் அரசியலமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களை ஒரு கிராம பஞ்சாயத்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சித்தாப்பூர் மக்கள் கருணையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார்.
Transport Department: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு பேருந்துல போறீங்களா? அப்படினா இதோ முக்கிய செய்தி!