கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மீது விசாரணை - நீதிமன்றம் உத்தரவு!
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தனது உறவினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக கேரள முன்னாள் முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த திருவனந்தபுரம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள முதலமைச்சராக திரு. உம்மன் சாண்டி பதவி வகித்தபோது, பல்வேறு முக்கிய அரசுப் பொறுப்புகளில் தனது உறவினர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, ஐக்கிய ஜனநாயக முன்னணித் தலைவர்கள் 9 பேர் மீதும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உம்மன் சாண்டி மற்றும் 9 பேர் மீது விசாரணை நடத்த திருவனந்தபுரம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பல கோடி ரூபாய் சூரியமின் தகடு ஊழல் தொடர்பாக சிவராஜன் தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு திரு. உம்மன் சாண்டி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.