"அத்வானி, உமா பாரதி, ஜோஷி 30ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு" பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அதிரடி
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் நீதிமன்றத்தில் வரும் 30-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தவிட்டது.
விடுவிப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக எல்.கே.அத்வானி(வயது89),முரளி மனோகர் ஜோஷி(வயது 83), உமாபாரதி(வயது57), சம்பத் ராய் பன்சால்,சதீஸ் பிரதான், தரம் தாஸ், மகந்த் நிர்தியா கோபால் தாஸ், மகாமதலீஸ்வர்ஜகதீஸ் முனி, ராம் விலாஸ் விதாந்த், வைகுண்ட் லால் சர்மா, சத்தீஸ் சந்திரா ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து இருந்து. அலகாபாத் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் விடுவித்தது.
மீண்டும் விசாரணை
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் தொடரப்பட்டு இருந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. மேலும், 2 ஆண்டுகளுக்குள் தினந்தோறும் வழக்கை நடத்தி தீர்ப்பளிக்கவும் சி.பி.ஐ. நீதிமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி உத்தரவிட்டது.
நேரில் ஆஜராக
இந்நிலையில், லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்குதொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இதில் குற்றம்சாட்டப்பட்டவர்களான பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்,கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் வரும் 30ந்தேதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அன்றைய தினம் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.