பிடல் காஸ்ட்ரோ மறைவு - மோடி, பிரணாப் இரங்கல்
கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். அவருக்கு வயது 90. 1959 முதல் 1976 வரை கியூபா நாட்டின் பிரதமாகவும் அதன்பின் 2008 வரை அதிபராகவும் பதவிவகித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில் இந்தியாவின் நண்பரும், கியூபா நாட்டின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ காலமான செய்தியறிந்து வருத்தம் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மிகப் பெரிய நண்பர் ஒருவரை இழந்து இந்தியா துயரம் கொள்வதாக, கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி, பிரதமர் மோடி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தி:
"பிடல் காஸ்ட்ரோ 20ம் நூற்றாண்டின் மிகவும் தனித்துவம் வாய்ந்த ஆளுமைகளுள் ஒருவர். அவரது இழப்பால் ஒரு மிகப் பெரிய நண்பரை இழந்து இந்தியா துயரமடைந்துள்ளது. கியூப அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தத் துயர்மிகு தருணத்தில் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.
பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.