சுங்கச் சாவடிகளில் 'பாஸ்டேக்' திட்டம் !! டிசம்பர் 15ஆம் தேதி வரை ஒத்திவைப்பு !!
சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும், 'பாஸ்டேக்' திட்டம் அமல்படுத்துவதை, டிசம்பர் 15ம் தேதி வரை, மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்க பாஸ்டேக் முறை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்திருந்தது.
ரேடியோ பிரேக்கியூயன்ஸி ஐடென்ட்டிஃபிகேஷன் (ஆர்.எப்.ஐ.டி) என்ற இந்த அட்டையை வாகனத்தின் முன் ஒட்டி சுங்கச்சாவடியை கடக்கும் போது 10 வினாடிகளில் கடந்துசெல்லலாம்.
நீண்ட நேரம் வரிசையில் நிற்கவேண்டியதில்லை.இதனை பெற வாகன பதிவு சான்று, புகைப்படம், மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை இந்த பாஸ்டேக் கார்டை இலவசமாக வழங்க வங்கிகளுக்கு நெடுஞ்சாலை துறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது
நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில், மத்திய அரசு சார்பில், 522 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றை, தினமும், சராசரியாக, ஒரு கோடியே, 40 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன.
இதனால், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், டிசம்பர், 1ம் தேதி முதல், 'பாஸ்டேக்' எனப்படும், மின்னணு முறையில் சுங்கக்கட்டணம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்படும் என, மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாஸ்டேக் அமல், டிசம்பர் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.