ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் விமானப்படைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, வி.வி.ஐ.பி.களுக்காக 36 ஆயிரத்து கோடி ரூபாயில் 12 ஹெலிகாப்டர் வாங்குவதற்காக இங்கிலாந்தை சேர்ந்த, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில், முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ கடந்த 9ம் தேதி விமான படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி மற்றும் அவரது உறவினர் சஞ்சீவ் தியாகி, வக்கீல் கவுதம் ஆகியோரை கைது செய்தது. இதனிடையே, மூவரும் ஜாமீன் கோரி, டெல்லி பாட்டிலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையின் போது, எஸ்.பி. தியாகி தரப்பில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் கேட்ட அனைத்து, ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தக்கப்பட்டது. இதையடுத்து ஆஜரான சிபிஐ தரப்பினர், விசாரணை நடத்துவதற்காக காலஅவகாசம் கோரினர். இருதரப்பினரின் வாதத்தை கேட்டறிந்த பாட்டிலா நீதிமன்ற நீதிபதி நாளை மறுநாள் வரை விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.