பெங்களூரில் கொட்டித் தீர்த்த கனமழை …. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி….
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று இரவு திடீரென மேகம் திரண்டு இடி மற்றும் மின்னலுடம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெயில் 100 டிகிரியைத் தொட்டுள்ளது. தெலங்கானாவில் கடும் வெயிலால் இது வரை 10 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதே போன்று கர்நாடகா மாநிலத்திலும் வெப்பம் மிகக் கடுமையாக உள்ளது. வரும் 12 ஆம் தேதி இங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
பகலில் கடுமையான வெயில் நிலவி வருவதால் வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சற்று தொய்வடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று இரவு திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து இடி,மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்யததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
மேலும் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.