ஒரே கிராமத்தில் எல்லோருக்கும் ஒரே பிறந்தநாளா? - ஆதார் அட்டையால் அல்லல்படும் மக்கள்
உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கும் ஒரே நாளில் அதாவது ஜனவரி 1-ந்தேதியே பிறந்தநாளாக ஆதார் கார்டில் அச்சடிக்கப்பட்டுள்ளதால் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதைபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் குளறுபடிகள் ஏற்பட்டு அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை
உத்தரப் பிரதேசத்தில் அலகாபாத் ஜஸ்ரா மண்டலத்தில் உள்ள கன்ஜசா கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிறந்தநாள் ஜனவரி 1- என்று குறிப்பிட்டு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பிறந்ததேதியில் குழப்பம்
ஏராளமானோருக்கு அவர்களின் உண்மையான பிறந்தநாள் தேதி இல்லாமல், ஜனவரி 1-ஆம் தேதி என்று உள்ளது. சிலருக்கு ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் இதேபோல ஜனவரி 1-ந்தேதியாக குறிப்பிட்டு ஆதார் வழங்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதலில் ஒரு சிலருக்கு இவ்வாறு தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிறந்த தினம் தவறாக, அதுவும் ஜனவரி 1-ஆம் தேதி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது பின்னர் தெரியவந்தது.
புகார்
இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அவர் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, இந்தத் தவறு எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
மென்பொருள்
பிறந்த தேதி சரியாக தெரியாது என்று கூறுபவர்களுக்கு ஜனவரி 1-ஆம் தேதியை பிறந்த தினமாக எடுத்துக் கொள்ளும் நடைமுறை ஆதார் அட்டை வழங்கும் மென்பொருளில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் அதிகமானோர் சரியான பிறந்த தினத்தை கூறாததால் அவர்கள் அனைவருக்கும் ஜனவரி 1-ஆம் தேதியை பிறந்த நாளாகக் குறிப்பிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நடவடிக்கை
அதேநேரத்தில் பிறந்த தேதிக்கான ஆவணத்தை அளித்த பலருக்கும் ஜனவரி 1-ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவறான பிறந்த நாள் குறிப்பிடப்பட்டவர்களுக்கு அதனைத் திருத்தி சரியான பிறந்த நாளுடன் புதிய ஆதார் அட்டை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ராஜஸ்தானிலும் ஆதார் குளறுபடி
இதேபோல ராஜஸ்தான் மாநிலம், போக்ரான் அருகே பாகுபாடியா கிராமத்திலும் 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜனவரி 1-ந்தேதி பிறந்தநாளாக குறிப்பிட்டு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பாகுபாடியா கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் புதிய ஆதார் கார்டுகள் வழங்கப்படும் என அதிகரிகள் தெரிவித்தனர்.
அதேசமயம், அரசு சார்பில் ஆதார் கார்டு பதிவு செய்ய அமைக்கப்பட்ட ‘இமித்ரா’ அமைப்புகளில் பணியாற்றியவர்கள்தான் கவனக்குறைவாக இருந்தனர் என்று கிராமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.