வரும் 28-ம் தேதி முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கு தட்டம்மை தடுப்பூசி.. பொது சுகாதாதரத்துறை முக்கிய தகவல்..
தென் மாவட்டங்களில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு வரும் 28-ம் தேதி முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என்று பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே வெள்ளம் சூழந்தது. பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், இன்னும் ஒரு சில இடங்கள் தண்ணீர் வடியாமல் உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று முன் தினம் முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனிடையே மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அதிகளவில் நீர் தேங்கி இருந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்ச்சல், இருமல் போன்ற தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளதால் அங்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென் மாவட்டங்களில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு வரும் 28-ம் தேதி முதல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்படும் என்று பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ கனமழை எதிரொலியாக தென் மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 28-ம் தேதி முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
தென் மாவட்டங்களில் மொத்தம் 8 லட்சம் குழந்தைகளும் சிறார்களும் உள்ளனர். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும். மத்திய அரசு தரப்பில் 10 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே போதிய அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.