ஜி.எஸ்.டி.யால் ஆம்னி பஸ் கட்டணம் உயருமா? இதை படிங்க!
நாடுமுழுவதும் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வர இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி( ஜி.எஸ்.டி.வரி)விதிப்பு முறையால், தனியார் ஆம்னி பஸ்களின் டிக்கெட் கட்டணம் கனிசமான அளவு உயர வாய்ப்புள்ளது.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு முன் ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவை வரியாக 15 சதவீதம் விதிக்கப்பட்ட நிலையில், ஜி.எஸ்.டி.யில், இனி 18 சதவீதம் செலுத்த வேண்டும், இதனால், தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் வழக்கத்தைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகரிக்கும்.
இது குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அமைப்பின் தலைவர் ஓ.அப்சல் கூறுகையில், “ ஜி.எஸ்.டி. வரியால் பஸ் கட்டணம் பெரியஅளவுக்கு உயரப்போவதில்லை.
ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் இதற்கு முன் 15சதவீதம் சேவை வரி செலுத்தினார்கள், இனிமேல், 18சதவீதம் செலுத்த வேண்டும். மேலும், ஏ.சி. இல்லாத பஸ்களுக்கு சேவை வரி கிடையாது.
அதேசமயம், ஏ.சி. பஸ்களுக்கு சேவை கட்டணம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது” என்றார்.
சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் ஏறக்குளைய ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 700 பஸ்கள் ஏ.சி.பஸ்களாகும்.
தனியார் ஆம்னி பஸ்களில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் பயணிகள் பயணிக்கிறார்கள். அதேசமயம்,
தமிழக அரசு பஸ் சார்பில் 21 ஆயிரம் பஸ்கள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன, இதில் 2 கோடி பயணிகள் நாள் ஒன்றுக்கு பயணிக்கிறார்கள்.
டிக்கெட் கூஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வாசு ராமசாமி கூறுகையில், “ ஆன்-லைனில் ஏ.சி. பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் 18 சதவீதம் வரி இருக்கும்” என்றார்.
ஆக, ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு பின், ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவுசெய்தால், டிக்கெட் அதிகரிக்கும் என்பது உறுதியாகியுள்ளது.