இனி தப்பிக்கவே முடியாது… ஜி.எஸ்.டி. அமல்படுத்துவதை கண்காணிக்க 200 அதிகாரிகள்!
நுகர்வோர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) உரிய முறையில் அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை மத்திய அரசு நேற்று நியமித்துள்ளது.
அச்சம்
கடந்த 1-ந் தேதியில் இருந்து மறைமுக வரிகள் முழுமையாக நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வரி முறையில் பல குழப்பமான நடைமுறைகள், விதிகள் இருப்பதால், பொருட்களின் விலை உயரும் என அச்சத்துடனே இருந்து வருகிறார்கள்.
அரசு அறிவிப்பு
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி முறையாக அமல் படுத்தப்படுகிறதா?, நுகர்வோர்களுக்கு பாதிப்பில்லாமல் இருக்கிறதா? என்பதை கண்காணிக்க 200-க்கும்மேற்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைச் செயலாளர்
மேலும், நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒன்றாக இணைத்து, 166 கொத்துக்களாக உருவாக்கி, மத்திய வருவாய் துறையின் நிர்வாக அமைப்புக்கு ஏற்றார்போல் அரசு பிரித்துள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் இணைச் செயலாளர் அல்லது அதற்கு அதிகமான அதிகாரத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
கண்காணிப்பு
இந்த அதிகாரிகள் நாட்டில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கிறதா?, சில்லரை விலை ஜி.எஸ்.டி. விதிமுறைப்படி விற்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட சூழலில் விலைமாற்றப்படும் பட்சத்தில் அது குறித்து நுகர்வோர் விவகாரத்துறைக்கும், வருவாய் துறைக்கும் இந்த அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
இந்த 200க்கும் ேமற்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஜி.எஸ்.டி. எப்படி அமல்படுத்தப்பட்டுள்ளது, அதனால் நுகர்வோர்கள் சந்திக்கும்பிரச்சினைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்.
கடைகள் கண்காணிப்பு
மத்தியஅரசின் பல்வேறு துறைகளில் பணி அமர்த்தப்பட்ட இந்த அதிகாரிகள், மாவட்டங்களில் வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்து இருக்கிறார்களா?, கடைகளில் ஜி.எஸ்.டி. வரியை தெரியப்படுத்துகிறார்களா? என்பதை கண்காணிப்பது, ஜி.எஸ்.டி. குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்துவது, ஜி.எஸ்.டி.என். நெட்வொர்க் செயல்பாடு, கடைகளில் முறையாக பொருட்களுக்கு பில் போடப்படுகிறதா என்பதையும் இந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.
கருத்துகள் கேட்பு
மேலும், நுகர்வோர் அமைப்புகள், தனிப்பட்ட நுகர்வோர்கள், வர்த்தக அமைப்புகள், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவற்றில் இருந்து நாள்தோறும் கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அளிப்பார்கள். கால் சென்டர், இணைதளங்கள், கானொலி மூலம், சமூக வலைதளம் ஆகியவற்றை இதற்காக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வர்த்கர்கள் பில் போட பயன்படுத்தும் மென்பொருள், குறிப்பாக கணக்கீடு மற்றும்பில்லிங் முறையையும் தீவிரமாக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.