ஜிஎஸ்டியால் குடிநீர் கேன் விலை உயரும் – உற்பத்தியாளர்கள் தகவல்…
ஜிஎஸ்டி வரி விதிப்பால் குடிநீர் கேன் விலை உயரும் என அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையை பின்பற்றி ஜிஎஸ்டி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதில் குடிநீருக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் ஜி.எஸ்டி வரி குறித்த விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு அடைக்கப்பட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் வணிக வரித்துறை ஊழியர்கள் பயிற்சி மைய இயக்குநர் ரஸீயா மற்றும் துணை இயக்குநர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வரி விதிப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன. மேலும், குடிநீர் உற்பத்தியாளர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்பட்டன.
ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அடைக்கப்பட்ட கேன் குடிநீர் மற்றும் பாக்கெட்டுகளுக்கு அரசு வரி விலக்கு அளித்திருந்த நிலையில் பாட்டில் குடிநீருக்கு மட்டும் 14.5 விழுக்காடு வரி வசூலிக்கப்பட்டது எனவும், அதனால் தற்போதைய வரி விதிப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது எனவும்ரஸீயா தெரிவித்தார்.
இதைதொடர்ந்து பேசிய தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்க நிறுவனர் முரளி, 18 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் குடிநீர் கேன்களின் விலை 10 ரூபாய் வரை உயரும் எனவும் இதனால் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.