இன்னமும் சிறுபிள்ளைத்தனமாவே இருக்கீங்களே.. எடப்பாடியாரை சாடிய விகே சசிகலா
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த காரணத்திற்காக செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் சிறுபிள்ளைத்தனமானது என விகே சசிகலா தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனின் கட்சி பதவி பறிப்பு
அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட வேண்டும். ஒன்றுபட்ட அதிமுக.வால் மட்டுமே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் நேற்றைய தினம் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனின் அனைத்து விதமான கட்சி பதவிகளும் பறிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சிறுபிள்ளைத்தனமான செயல்
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விகே சசிகலா, “அதிமுக.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்த செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ள செயல் சிறுபிள்ளைத்தனமானது. முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த நிர்வாகியும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையனின் பதவி பறிப்பு என்பது அறிவார்ந்த செயல் கிடையாது.
திமுகவை வீழ்த்துவதே குறிக்கோள்
திமுக.வை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிக்கு நாம் இறையாகிவிடக் கூடாது. அனைவரும் இணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
“சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று, சிறுசா இருக்கையில் திருத்திக்கோ, தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ” என்ற எம்.ஜி.ஆர். பாடல் வரிகளை சுட்டிக்காட்டி சசிகலா எடப்பாடி பழினசாமிக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.