- Home
- Tamil Nadu News
- TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!
TN Politics: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! தவெகவில் ஐக்கியம்! அடுத்து என்ன நடக்கும்? பெரும் ட்விஸ்ட்!
TN Politics: தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் 3 பேரும் தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர். அடுத்து என்ன நடக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.

தவெக ஆட்சி; இரண்டாக உடைந்த அதிமுக
தமிழகத்தில் கடந்த மே 4ம் தேதி முதல் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்து வருகின்றன. 2026 சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. திமுக கூட்டணி கட்சிகள் உதவியுடன் தவெக ஆட்சியில் அமர்ந்தது. விஜய் முதல்வராக பொறுப்பெற்றார். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அதாவது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொங்கியெழுந்தனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தனியாக கூட்டமும் நடத்தினார்கள். இதனால் கோபம் அடைந்த இபிஎஸ் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட பலரின் பொறுப்புகளை பறித்தார். இந்த நிலையில், தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதாவது மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் 3 பேரும் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் ஆவர். இவர்கள் 3 பேரும் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்கள் ஆன வெறும் 21 நாளில் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவெகவில் இணைந்தனர்
எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து பேசினார்கள். தவெகவில் இணைந்தனர். இவர்கள் 3 பேரும் தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யை சந்திக்கின்றனர். 3 பேரும் ராஜினாமா செய்ததன் மூலம் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும். இவர்கள் தவெகவில் இணைந்து விசில் சின்னத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.
அதிமுக மேலும் பலவீனமாகிறது
3 பேர் ராஜினாமா செய்ததன் மூலம் சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 44 ஆக குறைந்துள்ளது. ஏற்கெனவே இரண்டு துண்டாக உடைந்துள்ள அதிமுகவுக்கு இது மேலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தவெக அரசு பெரும்பான்மை இல்லாததால் திமுக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைத்துள்ளது. இப்போது 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் இந்த இடங்களும் காலியாகும். இங்கு மீண்டும் தேர்தல் நடக்கும்போது தவெக வெற்றி பெற்றால் கூடுதல் இடங்கள் அவர்களுக்கு கிடைக்கும். ஏற்கெனவே திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் ராஜினாமா செய்து விட்டதால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

