- Home
- Sports
- தாயின் இறுதிச்சடங்கு முடிந்ததும் களமிறங்கிய CSK வீரர்... வெற்றியை சமர்ப்பித்து நெகிழ வைத்த ருதுராஜ்..!
தாயின் இறுதிச்சடங்கு முடிந்ததும் களமிறங்கிய CSK வீரர்... வெற்றியை சமர்ப்பித்து நெகிழ வைத்த ருதுராஜ்..!
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிஎஸ்கே வீரரின் தாயார் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, அடுத்த நாளே சென்னை அணிக்காக விளையாடிய அந்த வீரர் பற்றி பார்க்கலாம்.

CSK Player mother death
வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் நேற்று ஐபிஎல் லீக் போட்டியில் களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங் அணி 207 ரன்களை குவித்தது. சென்னை அணியின் துவக்க வீரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். ஓப்பனராக களமிறங்கிய அவர் இறுதிவரை ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கோடு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் படுமோசமாக பேட்டிங் ஆடி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 103 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே. ஆனால், இந்த வெற்றியை விட, சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரியின் அர்ப்பணிப்புதான் கிரிக்கெட் உலகையே நெகிழ வைத்திருக்கிறது.
கலங்க வைத்த முகேஷ் செளத்ரி
மும்பை அணியின் ஓப்பனர் குயின்டன் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, முகேஷ் அதைக் கொண்டாடவில்லை. மாறாக, நடுங்கும் விரல்களை வானத்தை நோக்கி உயர்த்தி, 'அம்மா, இது உனக்காகத்தான்' என்று அவர் மனதுக்குள் சொல்லிக்கொண்டது அனைவரையும் கலங்க வைத்தது. காரணம், மிகப்பெரிய தனிப்பட்ட துக்கத்திற்கு மத்தியில்தான் முகேஷ் அந்தப் போட்டியில் விளையாட வந்திருந்தார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முகேஷின் தாயார், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
முகேஷின் அர்ப்பணிப்பு
ராஜஸ்தானில் உள்ள தனது சொந்த ஊரான பில்வாராவில் தாயின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல், அடுத்த நாளே சென்னை அணியுடன் வந்து சேர்ந்தார். சக வீரர் கலீல் அகமது காயமடைந்ததால், அணிக்குத் தனது பங்களிப்பு அவசியம் என்பதை உணர்ந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார். போட்டியில், அகீல் ஹொசைனுடன் இணைந்து சென்னை அணிக்காகப் பந்துவீச்சைத் தொடங்கிய முகேஷ், தனது முதல் ஓவரிலேயே விக்கெட் எடுத்து அசத்தினார். ரோஹித் இல்லாத நிலையில், மும்பையின் பேட்டிங் நம்பிக்கையாக இருந்த குயின்டன் டி காக்கை போல்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார்.
நெகிழ வைத்த ருதுராஜ்
அந்த விக்கெட்டை எடுத்த பிறகுதான், எந்த ஆரவாரமும் இல்லாமல், வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி, தனது தாய்க்கு அந்த விக்கெட்டை அர்ப்பணித்தார். இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை முகேஷ் கைப்பற்றினார். ஏனெனில் முகேஷ் செளத்ரி இன்று கிரிக்கெட்டில் ஜொலிக்க முக்கிய காரணம் அவரது தாயார் தானாம். அம்மா கொடுத்த ஊக்கத்தால் தான் இன்று இந்த நிலையில் இருக்கிறார் முகேஷ்.
போட்டி முடிந்ததும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த முகேஷை, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஓடிவந்து ஆரத்தழுவிக்கொண்டார். பரிசளிப்பு விழாவில் பேசிய ருதுராஜ், இந்த வெற்றியை முகேஷுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறினார். "முகேஷுக்கு இது மனதளவில் மிகப்பெரிய போராட்டமாக இருந்திருக்கும். இப்படி ஒரு சூழலில் இருந்து மீண்டு, அணிக்காக விளையாட வருவதற்கு அசாத்திய தைரியம் வேண்டும். அவருடைய அந்த மன உறுதிக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். இந்த வெற்றி அவருக்கானது," என்று ருதுராஜ் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

