- Home
- Sports
- Sports Cricket
- ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!
ரூ.100 கொடுத்தால் தான் செல்ஃபி.. சிறுவர்களிடம் கண்டிஷன் போட்ட வைபவ் சூர்யவன்ஷி: கடைசியில் ட்விஸ்ட்!
Vaibhav Suryavanshi: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி செல்ஃபி எடுக்க வந்த சிறுவர்களிடம் பணம் கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

வைபவ் சூர்யவன்ஷி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, ஏர்போர்ட்டில் விமானத்திற்காகக் காத்திருந்தபோது, அவரிடம் செல்ஃபி கேட்க வந்த இரண்டு சிறுவர்களிடம், 'ஒரு செல்ஃபிக்கு 100 ரூபாய்' என்று ஜாலியாகக் கேட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி, வைபவ்வின் ஹியூமர் சென்ஸைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே இந்த வீடியோவை தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. தன்னைவிட சில வயது மட்டுமே சிறியவர்களாக இருக்கும் அந்த இரண்டு சிறுவர்களிடம் வைபவ் சூர்யவன்ஷி ஜாலியாகப் பேசுவதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்க முடியும். அதாவது அந்த வீடியோவில், ஏர்போர்ட்டில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்ற வீரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் இரண்டு சிறுவர்கள், வைபவ் சூர்யவன்ஷியிடம் செல்ஃபி கேட்கிறார்கள்.
செல்பி எடுக்க ரூ.100 வேண்டும்
அதற்கு வைபவ், "நான் யாருக்கும் இலவசமா செல்ஃபி கொடுக்கறது இல்ல. ஒரு செல்ஃபிக்கு 100 ரூபாய் வாங்குவேன். நீங்க 100 ரூபாய் கொடுத்தா, செல்ஃபி எடுத்துக்கலாம்" என்று சீரியஸாகச் சொல்கிறார். இதைக் கேட்டதும் அந்த சிறுவர்கள் சில நொடிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பிறகு 200 ரூபாயை கையில் எடுத்து, "எங்க ரெண்டு பேருக்கும் உங்ககூட செல்ஃபி வேணும்" என்று பணத்தை வைபவ் சூர்யவன்ஷியிடம் கொடுக்க முயல்கிறார்கள்.
உடனே வைபவ், "அடேய் தம்பி, சும்மா ஜோக் பண்ணேன்" என்று சிரித்துக்கொண்டே, அந்த இரண்டு சிறுவர்களுடனும் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்த வீடியோ இப்போது பயங்கர வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், "குழந்தைகள், தங்களது வயதை ஒத்த பையனிடம் செல்ஃபி கேட்கிறார்கள்" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
36 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் சாதனையைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 36 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தை அடித்தார். இது ஐபிஎல் வரலாற்றில் 3வது அதிவேக சதம் ஆகும். சூர்யவன்ஷியின் இந்த பேட்டிங், எஸ்.ஆர்.ஹெச் கேப்டன் பாட் கம்மின்ஸின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
32 சிக்சர்களை விளாசியுள்ளார்
"அவர்தான் என்னோட புது ஃபேவரைட் பிளேயர்னு நினைக்கிறேன். பந்தை ரொம்ப பலமா அடிக்கிறார். அதைப் பார்க்கவே நன்றாக உள்ளது. ஒரு பவுலரா நீங்கள் சரியாக பந்து வீசவில்லை என்றால் அது ரொம்ப தூரம் போகும். சூர்யவன்ஷியோட ஆட்டம் ரொம்பவே பிரமாதமாக உள்ளது. அவரோட கரியருக்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருக்கார். ஆட்டத்தை அவரே முன்னெடுத்துச் செல்கிறார்" என்று கம்மின்ஸ் பாராட்டியுள்ளார்.
இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி இதுவரை எட்டு போட்டிகளில் 44.63 சராசரியுடன், 234.87 ஸ்ட்ரைக் ரேட்டில் 357 ரன்கள் எடுத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் 31 பவுண்டரிகள் மற்றும் 32 சிக்ஸர்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

