- Home
- Sports
- Sports Cricket
- டி20 உலகக்கோப்பை.. ஹோட்டல் ரூமில் அலறிய பெண் ஊழியர்.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்!
டி20 உலகக்கோப்பை.. ஹோட்டல் ரூமில் அலறிய பெண் ஊழியர்.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்!
சட்டச் சிக்கலில் சிக்குவதைத் தவிர்க்க, மேலாளர் நவைத் சீமா பாகிஸ்தான் வீரர் சார்பாக மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும், அந்த வீரருக்கு உடனடியாகப் பெரும் தொகையை அபராதமாக விதித்து, இப்போதைக்கு இந்த விவகாரத்தை முடித்து வைத்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை 2026
டி20 உலகக் கோப்பையில் படுமோசமாக விளையாடிய பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றில் மூட்டையை கட்டியது. இந்த நிலையில், இலங்கையின் கண்டியில் உள்ள 'கோல்டன் கிரவுன்' ஹோட்டலில் தங்கியிருந்த, பெயர் குறிப்பிடப்படாத பாகிஸ்தான் வீரர் ஒருவர், ஹவுஸ்கீப்பிங் பணியில் இருந்த பெண் ஊழியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு அபராதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெண் ஊழியரிடம் அநாகரீகமாக நடந்த பாகிஸ்தான் வீரர்
இது தொடர்பாக'டெலிகாம் ஏசியா ஸ்போர்ட்' வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு எதிரான முக்கியமான சூப்பர் 8 போட்டிக்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் ஊழியர் தனது தினசரி பணிக்காக வீரரின் அறைக்குச் சென்றபோது, அவர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமாகக் கத்தியுள்ளார். உடனடியாக ஹோட்டல் பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து வந்து அவரை மீட்டுள்ளனர்.
மன்னிப்பு கேட்ட மேலாளர்
பின்னர், ஹோட்டல் மேலாளர், பாகிஸ்தான் அணி மேலாளர் நவைத் சீமாவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். ஹோட்டல் நிர்வாகம் அந்த வீரருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. ஆனால், இலங்கையில் சட்டச் சிக்கலில் சிக்குவதைத் தவிர்க்க, மேலாளர் நவைத் சீமா வீரர் சார்பாக மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும், அந்த வீரருக்கு உடனடியாகப் பெரும் தொகையை அபராதமாக விதித்து, இப்போதைக்கு இந்த விவகாரத்தை முடித்து வைத்துள்ளார். ஆனால், இந்தச் சம்பவத்தால் போட்டியின் போது அணியின் சூழல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்த விவகாரம் இத்துடன் முடியவில்லை. அணி பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட வீரர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முன் ஆஜராக வேண்டியுள்ளது. சர்வதேசப் பயணங்களின் போது இதுபோன்ற ஒழுங்கற்ற நடத்தையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாரியத்தின் உயர் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர் சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர்கள்
பாகிஸ்தான் வீரர்கள் வெளிநாட்டுப் பயணங்களில் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஹைதர் அலி 2025ம் ஆன்டு பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, மான்செஸ்டர் காவல்துறையினர் இவரைக் கடுமையான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தனர்.
ஆதாரங்கள் இல்லாததால் பின்னர் விடுவிக்கப்பட்டார். இதேபோல் பாகிஸ்தான் அணியின் ஊழியரான மலங் அலி என்பவர் மலேசியப் பயணத்தின் போது ஒரு பெண் ஊழியரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு தண்டனைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

