ரூ.5000 முதலீடு.. இன்று ரூ.12,000 கோடி வருமானம்.. தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் பணக்கார கோழி விவசாயிகள்..
1984-ல் 200 கோழிகளுடன் தொடங்கிய இந்த நிறுவனம், தற்போது நாட்டின் 18 மாநிலங்களில் உள்ள 15,000 கிராமங்களில் பரவியுள்ளது.
தொழிலில் வெற்றிபெற ஐஐடி அல்லது ஐஐஎம் கல்வி தேவையில்லை என்பதையும், கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் தொழிலில் வெற்றி பெறலாம் என்பதையும் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனர்கள் சௌந்தரராஜன் சகோதரர்கள் நிரூபித்துள்ளனர். ஆம். இன்று பி சௌந்தரராஜன் மற்றும் அவரின் சகோதரர் சுந்தரராஜன் இருவரும் நாட்டின் பணக்கார கோழி பண்ணையாளர்கள். இந்த சகோதரர்கள் வெறும் 5000 ரூபாய் மூலதனத்தில் இந்த விவசாய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01h757xmwrwewrtwz20s5r7p4m/suguna6-1691319456664_300x400xt.jpg)
1984-ல் 200 கோழிகளுடன் தொடங்கிய இந்த நிறுவனம், தற்போது நாட்டின் 18 மாநிலங்களில் உள்ள 15,000 கிராமங்களில் பரவியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ரூ.12,000 கோடி. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய கோழி வணிகத்தை சௌந்தரராஜன் சகோதரர்கள் உருவாக்கி உள்ளனர்.
தங்களின் முதல் கோழிப்பண்ணையை உடுமலைப்பேட்டையில் அமைத்தனர். ஆனால் இன்று சுகுணா ஃபுட்ஸ், 18 மாநிலங்களில் உள்ள 15000க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 40000 விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறது. பி.சௌந்தரராஜன் அந்நிறுவனத்தின் தலைவர். இவரது மகன் விக்னேஷ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
சுகுணா ஃபுட்ஸ் நிறுவனம் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியிலிருந்து அதிக வருவாயைப் பெறுகிறது. பிராய்லர் கோழி மற்றும் முட்டை சந்தையில் முன்னணியில் உள்ளது. சௌந்தரராஜன் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் வேலை செய்யத் தொடங்கினார். காய்கறிகளை பயிரிடத் தொடங்கினார், அதில் லாபம் ஈட்ட முடியாததால், ஐதராபாத்தில் உள்ள விவசாய பம்ப் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அவர் தனது சகோதரரின் தொழிலில் சேர திரும்பினார்.
கோழித் தீவனத்தை விவசாயிகளுக்கு விற்பதே இவர்களின் ஆரம்ப தொழில். கோழி வளர்ப்பின் சவால்களை அவர்கள் விவசாயிகளிடமிருந்து கற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் விவசாயிகளை வேலைக்கு அமர்த்த நினைத்தனர். இது இந்தியாவின் புதிய கருத்தாக்கமாக இருந்தது. 1990-ல் வெறும் மூன்று விவசாயிகளுடன் இந்த மாதிரியைத் தொடங்கினார்கள்.
பி.சௌந்தரராஜன் மற்றும் ஜி.பி.சுந்தரராஜன் சகோதரர்கள் விவசாயிகளுக்கு கோழிகளை வளர்க்க தேவையான அனைத்தையும் வழங்கினர். விவசாயிகள் பணத்திற்கு ஈடாக வளர்ந்த பறவைகளை அவர்களுக்கு வழங்குவார்கள். அடுத்த 7 ஆண்டுகளில், 40 விவசாயிகள் அவர்களுடன் இணைந்தனர்.
suguna
அப்போது இந்த சகோதரர்களின் டர்ன் ஓவர் ரூ.7 கோடியை எட்டியது. சுகுணா சிக்கன் விரைவில் தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. அதன்பின்னர், அந்நிறுவனம் பின்னர் இந்த விவசாயிகளுக்கு விளைபொருட்களை ஆரோக்கியமான முறையில் வளர்ப்பதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கத் தொடங்கியது.
கோழிகளை வளர்ப்பதற்கு விவசாயிகளுக்கு கூலி வழங்கப்படுகிறது. மோசமான செயல்திறன் ஏற்பட்டால், நிறுவனம் குறைந்தபட்ச கட்டணத்தையும் செலுத்துகிறது. விவசாயிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தபட்ச சாகுபடி கட்டணம் கிடைக்கும்.
இவர்களின் தொழிலில் விவசாய வணிகம் 80 சதவீதத்திற்கும் மேலாக பங்களிக்கிறது. இந்த பொருட்கள் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்கும் சந்தைகளுக்கு விற்கப்படுகின்றன. இந்நிறுவனம் கால்நடை தீவனங்களையும் உற்பத்தி செய்கிறது. வணிகப் பின்னணியோ கல்வியோ இல்லாத போதிலும் அவர்கள் தங்கள் தொழிலை வளர்த்து அதில் வெற்றியும் பெற்றனர்.. 2021 நிதியாண்டில், அவர்களின் விற்றுமுதல் ரூ.9,155.04 கோடியாக இருந்தது.