4 வயசுல அந்த ரகசியம் தெரிஞ்சதும் கமல் துடிச்சு போயிட்டான்! மறக்க முடியாத நாள்.. பற்றி பேசிய சாருஹாசன்!
உலக நாயகன் கமல்ஹாசன் குறித்தும் அவருடைய குழந்தை பருவம் குறித்தும்... நடிகரும், கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் தன்னுடைய மனைவி கோமளவல்லியுடன் இணைந்து கொடுத்துள்ள பேட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு உலக நாயகனாக உயர்ந்தவர் கமல்ஹாசன். 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான 'களத்தூர் கண்ணம்மா' எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தன்னுடைய முதல் படத்திற்கே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி விருதை பெற்றார்.
குழந்தை நட்சத்திரமாக 6 திரைபடங்களில் நடித்த கமல், பின்னர் டான்ஸ் அசிஸ்டெண்டாக தங்கப்பன் அவர்களிடம் சில திரைப்படங்களில் பணியாட்டிறார். பின்னர் 1973 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில், வெளிவந்த 'அரங்கேற்றம்' திரைப்படத்தில் வாலிப வயதில் தோன்றினார். இதை தொடர்ந்து, 'கன்னியாகுமரி' எனும் மலையாள படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இத்திரைப்படதிற்காக முதல் பிலிம்பேர் விருது பெற்றார்.
பின்னர் இவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவினாலும்.. பல படங்கள் இவரின் சினிமா கேரியரை தூக்கி நிறுத்தியது. கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையில் எப்படி கே.பாலச்சந்தருக்கு முக்கிய பங்கு இருக்கிறதோ... அதே போல், கமல்ஹாசன் குடும்பத்தினர் கொடுத்த ஊக்கமும் தான் இவரை உலக நாயகனாக மாற்றியது.
இந்நிலையில் உலக நாயகனின் குழந்தை பருவம் குறித்து, சாருஹாசன் மற்றும் அவரின் மனைவி கோமளவல்லி ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சாருஹாசன், இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என நினைத்தாராம். அந்த நேரத்தில் தான் அவரது தாயார் ராஜலட்சுமி கர்ப்பமாகி உள்ளார்.
எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், இந்த குழந்தை யார் வளர்ப்பார்? அதற்காகவாவது நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்த, வேறு வழியில்லாமல் சாருஹாசன் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். இதன் பின்னர் தான் கோமளவல்லியை பார்த்து இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் ஆகும் போது கோமளவல்லிக்கு 19 வயது தானாம். எனினும் கமல் பிறந்ததில் இருந்து அவரை வளர்த்தவர் அண்ணி கோமளவல்லி தானாம்.
கமல்ஹாசன் தன்னுடைய அம்மா என நினைத்தது கோமளவல்லியை தானாம். மேலும் அவன் உன்னையே அம்மாவாக நினைக்கட்டும் யாரும் அவனிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஆனால் கமல்ஹாசனுக்கு 4 வயது இருக்கும் போது வீட்டில் வேலை செய்பவர்கள் மூலம் கமல்ஹாசனுக்கு கோமளவல்லி தன்னுடைய அம்மா இல்லை என்கிற உண்மை தெரியவர அவர் நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தாராம். யாராலும் அவரை சமாதானம் செய்ய முடியவில்லையாம்.
அந்த நாளை தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாது என கூறியுள்ள கோமளவல்லி. இதுவரை நான் கமலை என் மகனாக தான் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார். அதே போல் சாருஹாசனும் அவன் என் தம்பி என்பதை பல நேரங்களில் மறந்து விடுவேன். என்னுடைய மகனாக தான் பார்க்கிறேன் என உணர்வு பொங்க பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.