- Home
- Cinema
- Ilaiyaraaja : தாலாட்டுக்காக போட்ட மெட்டு... குத்துப்பாடலாக மாறிய அதிசயம்! மணிரத்னம் படத்துக்காக இளையராஜா செய்த மேஜிக்
Ilaiyaraaja : தாலாட்டுக்காக போட்ட மெட்டு... குத்துப்பாடலாக மாறிய அதிசயம்! மணிரத்னம் படத்துக்காக இளையராஜா செய்த மேஜிக்
Ilaiyaraaja Song Secret : இசைஞானி இளையராஜா, மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்திற்காக தாலாட்டு பாடல் ஒன்றை குத்துப் பாடலாக மாற்றி இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Nayakan Song Secret
ஒரு திரைப்படத்திற்காக இசையமைப்பாளர்கள் உருவாக்கும் அனைத்து பாடல்களும் இறுதியில் படத்தில் இடம்பெறுவதில்லை. பாடல் சிறப்பாக இருந்தாலும், காட்சியின் தன்மை, கதையின் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த டியூன் நிராகரிக்கப்படலாம். அப்படி ஒதுக்கப்படும் இசையை சில நேரங்களில் அதே இசையமைப்பாளர் வேறு படத்தில் பயன்படுத்துவதும் உண்டு. சில சமயம் ஏற்கனவே உருவாக்கப்பட்ட டியூனுக்கே புதிய வடிவம் கொடுத்து அதே படத்தில் வேறு பாடலாக இடம்பெறச் செய்வதும் நடக்கும்.
நாயகன் பட பாடல் ரகசியம்
அந்த வகையில், இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தில் சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட பாடல்களில் ஒன்று தான் ‘நிலா அது வானத்து மேலே’ பாடல். 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பாடலில் ஜனகராஜ் மற்றும் குயிலி இணைந்து நடனமாடியிருப்பார்கள். அந்த காலகட்டத்தில் மட்டுமின்றி இன்று வரை இளைஞர்கள் வைப் செய்யும் பாடலாக அது உள்ளது.
நிலா அது வானத்து மேலே பாடல் உருவான விதம்
படத்தின் கதையில், கமல்ஹாசன் போதைப்பொருளை படகு மூலம் கடத்தும் சூழ்நிலையில் போலீசாருக்கு தகவல் கிடைக்கிறது. அவர்கள் அங்கு வருவதை அறிந்ததும், போதைப்பொருள் அடங்கிய மூட்டையை உப்புடன் கட்டி கடலுக்குள் வீசி மறைத்து விடுவார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘நிலா அது வானத்து மேலே’ பாடல் இடம்பெறும். இன்று கேட்கும்போது முழுக்க முழுக்க உற்சாகமான குத்துப் பாடலாகத் தோன்றும் இந்த டியூனின் ஆரம்ப வடிவம் முற்றிலும் வேறுபட்டது என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம்.
தாலாட்டு ட்யூன் குத்துப்பாட்டாக மாறியது
இதுகுறித்து இளையராஜா ஒரு பேட்டியில் கூறுகையில், ‘நாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்பாண்டி சீமையிலே’ பாடலுக்குப் பதிலாக பயன்படுத்துவதற்காக முதலில் ஒரு தாலாட்டு மெட்டாக அந்த டியூன் உருவாக்கப்பட்டது. ஆனால் படத்தின் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு அந்த மெட்டு பொருத்தமாக அமையவில்லை. இதையடுத்து, அதே மெட்டுக்கு வேறு இசை வடிவம் கொடுத்து, அதை உற்சாகமான குத்துப் பாடலாக மாற்றியதாக இளையராஜா தெரிவித்துள்ளார். அப்படித்தான் பின்னர் அந்த டியூன் ‘நிலா அது வானத்து மேலே’ என்ற பாடலாக ரசிகர்களிடம் சென்றடைந்தது.
பட்டிதொட்டியெங்கும் ஹிட்
ஒரு தாலாட்டு மெட்டிலிருந்து உருவாகி, பின்னர் குத்துப் பாடலாக மாறிய இந்தப் பாடல், ‘நாயகன்’ திரைப்படத்தின் மறக்க முடியாத இசைத் தருணங்களில் ஒன்றாக மாறியது. இளையராஜாவின் இசையில் ஒரு மெட்டு எப்படி சூழலுக்கு ஏற்ப முற்றிலும் புதிய பரிமாணம் பெற முடியும் என்பதற்கும் இது ஒரு சுவாரஸ்யமான உதாரணமாக பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’, இருவரின் திரைப்பயணத்திலும் மிக முக்கியமான படமாக அமைந்ததோடு, தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகவும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

