- Home
- Cinema
- OTT Horror Movie : மர்ம சாலை... மாயமாகும் பயணிகள்; மிரள வைக்கும் இந்த பேய் படத்தை மிஸ் பண்ணாம பாருங்க...!
OTT Horror Movie : மர்ம சாலை... மாயமாகும் பயணிகள்; மிரள வைக்கும் இந்த பேய் படத்தை மிஸ் பண்ணாம பாருங்க...!
OTT Must watch movie : ஒரு மர்மமான சாலையை வைத்து மலையாளத்தில் வெளிவந்த திகிலூட்டும் திரைப்படம் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அப்படம் ஓடிடியில் டிரெண்டாகி வருகிறது.

OTT Horror Movie
ஓடிடி தளங்களில் திகில் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக, வித்தியாசமான கதைக்களம் மற்றும் நிஜ சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் மலையாளப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது கவனம் பெற்றிருக்கும் திரைப்படம் ‘சுமதி வளவு’. நிஜ வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் வெளியானபோது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திகில் நிறைந்த காட்சிகள், மர்மமான சம்பவங்கள் மற்றும் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் என படம் தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், திரையரங்க வசூலில் சுமார் ரூ.30 கோடி வரை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், IMDb தளத்திலும் இப்படத்திற்கு நல்ல மதிப்பீடு கிடைத்துள்ளது. இதனால் திகில் பட ரசிகர்களின் கவனத்தை ‘சுமதி வளவு’ வெகுவாக ஈர்த்துள்ளது.
என்ன கதை?
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள ஒரு கிராமத்தைச் சுற்றியே இப்படத்தின் கதை நகர்கிறது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாலை வளைவு பல ஆண்டுகளாகவே மர்மமான இடமாகப் பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த வளைவில் ஒரு கர்ப்பிணிப் பெண் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அவரது மரணத்திற்குப் பிறகு, அந்தப் பெண்ணின் ஆவி அங்கு சுற்றித் திரிவதாகவும், அந்த வழியாகச் செல்பவர்களுக்கு பல்வேறு அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுவதாகவும் உள்ளூர் மக்களிடையே ஒரு நம்பிக்கை உருவாகிறது.
குறிப்பாக, அந்தச் சாலையில் பயணிக்கும் சிலர் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்கள், அந்த இடத்தைச் சுற்றிய மர்மத்தை மேலும் அதிகரிக்கின்றன. உண்மையில் அந்த வளைவில் பேய் இருக்கிறதா? கர்ப்பிணிப் பெண்ணுக்கு என்ன நடந்தது? அவர் உயிரிழந்ததன் பின்னணி என்ன? பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மர்மத்தின் உண்மை என்ன? என்பதற்கான பதில்களை நோக்கியே திரைப்படத்தின் திரைக்கதை பயணிக்கிறது.
உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவான படம்!
திருவனந்தபுரம் அருகே உள்ள மைலேமூடு பகுதிகளில் நடந்ததாகக் கூறப்படும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ‘சுமதி வளவு’ என்பது திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனைப் பெயர் அல்ல என்றும் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இன்றும் இதே பெயரில் ஒரு சாலை வளைவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் மாளவிகா மனோஜ், கோகுல் சுரேஷ், பாலு வர்கீஸ், சாய்ஜு குருப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
திரையரங்குகளில் ரசிகர்களை திகிலூட்டிய இந்தப் படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மலையாளத்தைத் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படத்தைப் பார்க்க முடியும். திகில், மர்மம் மற்றும் நிஜ சம்பவங்களின் பின்னணியில் உருவான கதைகளை விரும்புபவர்களுக்கு, இந்தப் படம் கவனிக்கத்தக்க ஓடிடி தேர்வாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

