- Home
- Cinema
- Breaking News: எஸ்.ஜானகியை தொடர்ந்து காலமான பிரபல பின்னணி பாடகி.! இசையுலகில் அடுத்த பேரிழப்பு.!
Breaking News: எஸ்.ஜானகியை தொடர்ந்து காலமான பிரபல பின்னணி பாடகி.! இசையுலகில் அடுத்த பேரிழப்பு.!
Jamuna Rani Death: பழம்பெரும் பின்னணி பாடகி ஜமுனா ராணி பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. ஜமுனா ராணி மறைவு இசை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி மறைவு
இசையுலகில் தனது வசீகர குரலால் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்திருந்தவர் ஜமுனா ராணி. மூத்த பாடகியான இவருக்கு வயது 88. வயது மூப்பு காரணமாக தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், நேற்று பெங்களூருவில் காலமானார். இது தென்னிந்திய திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச் சடங்கு இன்று மதியம் கல்லஹள்ளி பகுதியில் நடைபெற உள்ளது. 1938 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த ஜமுனா ராணி தனது ஏழாவது வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
6,000-க்கும் அதிகமான பாடல்களை பாடிய ஜமுனா ராணி
‘தியாகய்யா’ என்கிற படத்தின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமான அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 6000 அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். இவரது குரல் மற்ற பாடகிகளைப் போல் அல்லாமல் தனித்துவமாக இருக்கும். விடுதி நடனப் பாடல்கள், ஜிப்சி எனப்படும் நாடோடிப் பாடல்கள், கிராமிய பாடல்களுக்கு இவருடைய குரல் அந்த நாட்களில் மிகவும் பொருத்தமாக இருந்ததால், இதே பாணியிலான பாடல்களை அதிகமாகப் பாடினார். தமிழில் 1952 ஆம் ஆண்டு வெளியான ‘கல்யாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
ஜமுனா ராணியின் சூப்பர் ஹிட் பாடல்கள்
தொடர்ந்து காளை வயசு கட்டான சைசு, பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன், யாரடி நீ மோகினி கூறடி என் கண்மணி, குங்குமப்பூவே கொஞ்சு புறாவே, மாமா மாமா மாமா, புன்னகை மன்னன் பூவிழி கண்ணன், செந்தமிழ் தேன் மொழியாள், அத்திக்காய் காய் காய் போன்ற பல பாடல்களை பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். திரைத்துறையில் கோலொச்சிக் கொண்டிருந்த அவருக்கு சில ஆண்டுகாலம் வாய்ப்பு இல்லாமல் போனது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மணிரத்தினம் இயக்கத்தில், இளையராஜா இசையில் ‘நாயகன்’ படத்தில் இடம்பெற்ற நான் சிரித்தால் தீபாவளி பாடலைப் பாடினார்.
ஜமுனா ராணி பணியாற்றிய இசை ஜாம்பவான்கள்
டி எம் சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பிபி ஸ்ரீனிவாஸ், ஏஎம் ராஜா, பி சுசீலா, பி லீலா, எல்.ஆர் ஈஸ்வரி, ஜிக்கி, எஸ்.ஜானகி, சூலமங்கலம் ராஜலட்சுமி, எம்.எஸ் ராஜேஸ்வரி போன்ற பல முன்னணி பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ளார். விஸ்வநாதன் ராமமூர்த்தி, கே.வி மகாதேவன், டி.ஆர் பாப்பா, வி.குமார், ஜி.கே வெங்கடேஷ், இளையராஜா போன்ற இசை ஜாம்பவான்களிடம் பணியாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர். இவருக்கு 1998 ஆம் ஆண்டு தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு தமிழக அரசால் அறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது.
இசையுலகிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பு
திரைத் துறையை சார்ந்த முக்கியர்கள் அடுத்தடுத்து காலமாகி வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாரதிராஜா, பாக்யராஜ், எஸ் ஜானகி வரிசையில் ஜமுனா ராணி மறைவு தென்னிந்திய இசையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

