மிக்ஜாம் புயல்.. நிவாரண பணிகளில் அரசுக்கு உதவிட பெருந்தொகை - உதயநிதியை சந்தித்து செக் கொடுத்த வைகை புயல்!
Vaigai Puyal Vadivelu : மிக்ஜாம் புயலால் சென்னையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக அரசுக்கு உதவும் வகையில் நடிகர் வைகை புயல் வடிவேலு உதவியுள்ளார்.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி கரையை கடந்த மிக்ஜாம் புயல் சென்னையில் புரட்டி போட்டு விட்டு சென்றது என்றால் அது மிகையல்ல. இந்த ஆண்டு பெரிய அளவில் புயல் சென்னையை தாக்கவில்லை என்றாலும் டிசம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பெய்த கன மழை காரணமாக சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
இரு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளை நாம் இணையத்தில் பார்த்திருப்போம். வெள்ள நீர் முழுமையாக வடியவே பல நாட்கள் எடுத்துக் கொண்ட நிலையில், தற்பொழுது சீரமைப்பு பணியில் இறங்கி உள்ளது தமிழக அரசு. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகைகளும் நாளை மறுநாள் முதல் வழங்கப்பட உள்ளது.
இந்த சூழலில் திரைத்துறையை சார்ந்த பல பிரபலங்களும் தங்களால் இயன்ற அளவிலான தொகையை அரசிடம் நேரடியாக ஒப்படைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகர் சூரி அவர்கள் மதுரையில் உள்ள தனது உணவகத்தின் சார்பாக 10 லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம், அவரை நேரில் சந்தித்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வைகைப்புயல் வடிவேலு அவர்கள் 6 லட்சம் ரூபாய்க்காண காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து புயல் நிவாரண நிதியாக கொடுத்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் "மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் அரசின் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவிடும் வகையில் "முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு" திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் 6 லட்சத்திற்கான காசோலையை இன்று வழங்கினார் அவருடைய அன்பிற்கு நன்றி" என்று அவர் கூறியுள்ளார்.