நெடுஞ்சாலையில் கையை விட்டு பைக் ஓட்டி வீடியோ வெளியிட்ட TTF வாசன் - ஆக்ஷன் எடுக்குமா காவல்துறை?
சென்னை அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதற்காக 13 இளைஞர்களை கைது செய்த போலீஸ் ஏன் TTF வாசனை கைது செய்யவில்லை என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
யூடியூப் மூலம் பிரபலமானவர் TTF வாசன். இவருக்கு யூடியூப்பில் 33 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருக்கின்றனர். பைக் ஓட்டும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் வாசன். இளைஞர்களை கவரும் விதமாக அதிவேகமாக பைக் ஓட்டுவது, பைக்கில் சாகசம் செய்வது என யூடியூப்பில் இவர் செய்யும் சேட்டைகள் ஏராளம்.
அதிவேகமாக பைக் ஓட்டி வீடியோ வெளியிட்டதன் காரணமாக இவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. பின்னர் அந்த வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்ற வாசன், தொடர்ந்து அதுபோன்று சாகசங்களை செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் தனது தோழியுடன் பைக்கில் சென்றபோது வெளியிட்ட வீடியோ தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... ரியல் ஹீரோ என நிரூபித்த சூர்யா... ரசிகர்களின் மேற்படிப்பு மற்றும் வேலை கிடைக்க உதவுவதாக வாக்குறுதி
அவர் தனது தோழியுடன் சென்னையில் இருந்து திருத்தணிக்கு செல்லும் போது நெடுஞ்சாலையில் கையைவிட்டு பைக் ஓட்டும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. இதனை பார்த்த நெட்டிசன்கள் இதுபோன்று நெடுஞ்சாலையில் சாகசம் செய்து தவறான முன்னுதாரணமாக இருக்கும் TTF வாசனை கைது செய்ய வேண்டும் என குரல்கொடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் சென்னை அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டதற்காக 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களை கைது செய்யும் போலீஸ் ஏன் TTF வாசனை கைது செய்யவில்லை என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் ஹெல்மெட் கேமராவை தடை செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் TTF போன்ற மோட்டோ vlog செய்பவர்கள் திருந்துவார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... உதயநிதி படம்னா அரசு நிறுவனத்தில் புரமோட் செய்வீங்களா? எதிர்ப்புகள் வலுத்ததால் துணிவு டுவிட்டை நீக்கிய TANGEDCO