‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை வீட்டிற்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Tourist Family Director Abishan Jeevinth Met Rajinikanth
கடந்த மே 1-ம் தேதி சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்த படத்தை திருச்சியைச. சேர்ந்த அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இருந்தது. இந்தத் திரைப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, ரமேஷ் திலக், கமலேஷ், மிதுன் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுமார் ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் ரூ.75 கோடிக்கு அதிகமான வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது. தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் கதை
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பம் தமிழ்நாட்டிற்கு சட்ட விரோதமாக குடியேறுகிறது. அப்போது அங்கு விரும்பத்தகாத சம்பவம் ஒன்று நடக்கிறது. அதை சசிகுமாரின் குடும்பம் தான் செய்திருக்கும் என்று எண்ணி போலீஸார் அவர்களைத் தேடுகின்றனர். அப்போது அவர்களது என்ன நடந்தது? அந்த குடும்பம் போலீஸிடம் சிறிது சிக்கியதா? என்பது போன்ற சவால்களை காமெடி கலந்து டூரிஸ்ட் ஃபேமிலி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை பலரும் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசித்து வந்தனர்.
அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டி ரஜினிகாந்த்
பொதுமக்கள் மட்டுமின்றி படத்தைப் பார்த்த திரைப் பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை வாழ்த்தியிருந்தனர். ராஜமௌலி, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் இயக்குனருக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தனர். சிவகார்த்திகேயன், சூர்யா, நானி போன்றவர்கள் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டி இருந்தனர். அந்த வரிசையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அபிஷந்தை வீட்டிற்கு வரவழைத்து பாராட்டியுள்ளார்.
நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட அபிஷன்
அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள அபிஷன், “நான் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்ததற்கான காரணம் நிறைவடைந்து விட்டதாக இன்று உணர்ந்தேன். அவர் என்னைச் பெயர் சொல்லி அழைத்து கட்டிப்பிடித்த விதம் என் உடம்பெல்லாம் கூஸ்பம்ஸ் ஆகிவிட்டது. அவர் என்னைப் பார்த்து புன்னகைத்தபோது நான் குழந்தையாக இருந்தபோது செய்த ஒவ்வொரு பிரார்த்தனையும் தாமதமாக வந்ததை போல் உணர்ந்தேன். ஆனால் அது எனக்கு தேவையான நேரத்தில் வந்து சேர்ந்தது. என்ன ஒரு மனிதர் அவர்? ஒரு எளிமையின் சின்னம் இந்த ஒரு தருணத்தை விட வேறு எந்த உந்துதலையோ, ஆசிர்வாதத்தையோ எதிர்பார்க்க முடியாது. என்றென்றும் உன்னை நேசிக்கிறேன் தலைவா” என்று பதிவிட்டுள்ளார்.
