Surya's ET : ஜெய்பீமை தொடர்ந்து எதற்கும் துணிந்தவனை மிரட்டுவதா.? பாமகவை புரட்டி எடுத்த எழுத்தாளர் சங்கம்!
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடவும் உகந்தச் சூழலை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிடக் கூடாது என்று பாமகவினர் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் எழுதி மிரட்டுவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், சரண்யா உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கடலூரில் வெளியிடக் கூடாது என்று பாமக மாணவர் அணி மாநிலச் செயலாளர் விஜயவர்மன் ஓரிரு நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு கடிதம் எழுதினர். ‘ஜெய்பீம்’ படத்தின் அக்னி கலசத்தையும் வன்னியர்ர்களையும் தவறாக சித்தரிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது பற்றியும் அதற்கு சூரியா மன்னிப்பு கோராததையும் சுட்டிக் காட்டியிருந்த பாமக மாணவர் அணி, சூரியா மன்னிப்பு கோராதவரை அவருடைய படத்தை கடலூரில் வெளியிடக் கூடாது என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடிருந்தது.
பாமகவின் இந்தக் கடிதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பாமகவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “2021 நவம்பரில் வெளியான ‘ஜெய்பீம்’ படம், வன்னியர்களை அவமதித்துவிட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தப் படத்தையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் அப்போது பாமகவினர் மிரட்டல் விடுத்திருந்தனர்.
அந்த மிரட்டலின் தொடர்ச்சியாக இப்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் திரையிடக்கூடாதென அக்கட்சியினரும் வன்னிய சங்கத்தினரும் மிரட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடவும் உகந்தச் சூழலை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டலுக்கு எதிராக குரல் எழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஜெய்பீமை கையில் எடுத்த பாமக.. சூர்யா படத்தை கடலூரில் வெளியிட கூடாது.. முஸ்டி முறுக்கும் பாட்டாளிகள்!