சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்துவரும் சூர்யாவின் திரைப்படத்தை, அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காதவரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது.

 நடிகர் சூர்யா படத்தை கடலூர் மாவட்டத்தில் வெளியிடக் கூடாது என்று பாமக மாணவர் அணி அமைப்பு, கடலூர் திரையரங்கு உரிமையாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வரும் 10 அன்று தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’, ‘ஜெய்பீம்’ ஆகிய படங்கள் கொரோனா அச்சம் காரணமாக ஓடிடி தளத்தில் வெளியாயின. ஆனால், தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், தியேட்டரில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், ‘எதற்கும் துணிந்தவன்’ படம் தியேட்டரில் வெளி வருகிறது. இதனால், சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடலூரில் சூர்யா நடித்த படத்தை வெளியிடக் கூடாது என்று பாமக திரையரங்க உரிமையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பாமக மாணவர் அணியின் மாநிலத் செயலாளர் விஜயவர்மன் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02-ம் தேதியில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் டி.செ.ஞானவேல் இயக்கிய திரைப்படத்தை 2டி நிறுவனம் தயாரித்து நடித்திருந்தார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மைச் சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க, கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ்.ஐ அந்தோணிசாமி என்ற தலித் கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல காட்டியுள்ளனர். சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்துவரும் சூர்யாவின் திரைப்படத்தை, அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காதவரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

கடந்த நவம்பர் மாதத்தில் ‘ஜெய்பீம்’ படம் சர்ச்சையான நிலையில் பாமக, வன்னியர் சங்கம் போன்றவை அப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தற்போது அந்த விவகாரம் முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட நிலையில், பாமக மீண்டும் அதை கையில் எடுத்துள்ளது.