தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம் என்றும் இங்கு மத கலவரத்தை உண்டாக்க பாஜக முயற்சி செய்வதாகவும் இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடு முழுவதும் பெரும் விஸ்வரூபமெடுத்துள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு திருப்பரங்குன்றம் மலை மேலே தீபம் ஏற்ற அனுமதி வழங்கவில்லை. திமுக இந்துக்களின் வழிபாட்டு முறையை தடுத்து வருவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. அதே வேளையில் பாஜக தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த முயல்வதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்த முயற்சி

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டும் என பாஜக செயல்பட்டு கொண்டிருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

முடிக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்கள்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது. அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.

நீதிமன்றங்கள் இப்படி செயல்பட வேண்டும்

தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.

சிறுபான்மை சமூகங்கள் மீது குறி

பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.