Asianet News TamilAsianet News Tamil

ஆணவத்துக்கு அடி பணியாதே... ஆமாஞ்சாமி போட்டு விடாதே..!

யாருக்கும் அஞ்ச வேண்டாம்; நம் ஆற்றல் என்ன என்று உணர்ந்தால் போதும், எல்லாமே சரியாகி விடும்.
 

old film song beauty and depth part-24 baskaran krishnamurthy
Author
Tamil Nadu, First Published May 2, 2020, 6:11 PM IST

திரைப்பாடல் - அழகும் அழமும்- 24:  அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே..!

ஒரு கிராமத்தில் நடக்கிற கதை. மிகவும் நாணயமான, பொது நலன் விரும்பும் மனிதர். அவரது மகனும் (நாயகன்) அப்படியே. ஆனால் அவனது மைத்துனன் அதற்கு நேர் எதிர். அத்தனை தீய குணங்களும் ஒருங்கே கொண்டவன். அவரின் மகள், தனது அத்தை மகனை (நாயகன்) விரும்புகிறாள். இறுதியில் யார் வெல்வது என்று,விறுவிறுப்பான காளைப் போட்டி தீர்மானிக்கும். அழகான வலிமையான அட்டகாசமான காளையைத் தேடித் தேடிப் பிடித்து, மிகுந்த விலை கொடுத்து வாங்கி வந்து நாயகன் - காளை சண்டை படமாக்கப்பட்டது.

 old film song beauty and depth part-24 baskaran krishnamurthy

இரண்டு 'காளைகள்' மோதுவதைக் கண்டு, திரை ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். 1956 இல் வெளிவந்த படம் - 'தாய்க்குப்பின் தாரம்'. கதை, இசை, நடிப்பு எல்லாம் சிறப்பாக அமைந்தது. அதிலும், எம்.ஜி.ஆர் - காளைமாடு சண்டை, என்றும் எவராலும் மறக்க முடியாதது. ஒரு குடியானவனை வில்லன் அடித்து விடுகிறான். அப்படியே காட்சி மாறுகிறது. ஒற்றை மாண்டு வண்டியில் அமர்ந்தபடி பாடிக்கொண்டு வருகிறான் நாயகன். 'மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே.. இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலே..' 

தரையில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்கள், திரையில் அமர்ந்தபடி பாடிவரும் நாயகனை ஆரவாரமாய் உற்சாகக் குரலெழுப்பி வரவேற்கிறார்கள். வந்து விட்டான் - சாமான்யர்களின் தலைவன்! வானம் பொழிந்து பூமி விளைந்து வருவது எல்லாம் இயற்கை தந்தது; நமது உழைப்பால் வந்தது. ஆனால் இதனை வேறுயாரோ ஒருவன் படை பலத்தால் குவித்து வைப்பது எவ்வகையில் நியாயம்..? 

old film song beauty and depth part-24 baskaran krishnamurthy

தான் விளைந்து மக்கள் பசி ஆற்றும் பயிர், ஆன்றடங்கி நிற்கிறது; யாருக்கும் பயனற்ற பதர்கள் மட்டும் ஆணவத்துடன் வான் நோக்கிப் பார்ப்பதை யாராலும் சகித்துக் கொள்ள முடியுமா...? யாருக்கும் அஞ்ச வேண்டாம்; நம் ஆற்றல் என்ன என்று உணர்ந்தால் போதும், எல்லாமே சரியாகி விடும். கவிஞர் மருதகாசியின் வரிகள் நெஞ்சில் தைக்கின்றன. 
கே.வி. மகாதேவன் இசையில் டி.எம்.சௌந்தராஜன் குரல், மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. 

பாடல் வரிகள் இதோ:

மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே.. 
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக் கவலே..

வானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப்பயலே 
நாம வாடி வதங்கி வளப்படுத்துவோம் வயலை
ஆனால் தானியம் எல்லாம் வலுத்தவனுடைய கையிலே 
இது தகாது என்னு எடுத்து சொல்லியும் புரியலே 

என்னடா.. நெளிஞ்சிக்கிட்டுப் போறே... நேரா போடா..

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு.. 
தன்குறையை மறந்து மேலே பார்க்குது பதரு 
அது போல் 
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே 
எதுக்கும் 
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே 

ஆணவத்துக்கு அடி பணியாதே தம்பிப்பயலே 
எதுக்கும் ஆமாஞ்சாமி போட்டு விடாதே தம்பிப்பயலே 
பூனையைப் புலியாய் எண்ணி விடாதே தம்பிப்பயலே 
உன்னைப் புரிஞ்சுக்காமலே நடுங்காதேடா தம்பிப்பயலே..

(வளரும்.

 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

இதையும் படியுங்கள்..

1.கற்புக்கு கண்ணகி... காதலுக்கு ஜானகி... தேவன் வந்து பாடுகின்றான்..!

2.காதலனுடன் நெருக்கமாக இருந்த போட்டோஸை வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்... லாக்டவுனால் வெளியான ரகசியம்..!

3.குழந்தையிலே சிரித்ததுதான் இந்த சிரிப்பு - அதை குமரிப் பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு...?
 

Follow Us:
Download App:
  • android
  • ios