யாராக இருந்தாலும் வறுமை - மிகப் பெரிய தண்டனைதானே..? ஆனால் இந்தச் சமூகம், சிலரின் ஏழ்மையை மட்டும் யாரும் சட்டை செய்வதே இல்லை. 

திரைப்பாடல் - அழகும் ஆழமும்: 22. அழகு சிரிக்கும் தோட்டம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

யாராக இருந்தாலும் வறுமை - மிகப் பெரிய தண்டனைதானே..? ஆனால் இந்தச் சமூகம், சிலரின் ஏழ்மையை மட்டும் யாரும் சட்டை செய்வதே இல்லை. 

அதற்காக வாழ்க்கையை உதறி விட முடியுமா..? போராடிப் போராடித்தான் நாட்களை ஓட்ட வேண்டி இருக்கிறது. ஆனாலும் அதற்காக அழுது கொண்டு இருக்கப் போவது இல்லை. சிரித்தபடியே சவால்களை எதிர் கொள்ளத் தயார் ஆகிறாள் அவள். ஆம். எதற்காகவும் தனது சிரிப்பை விட்டு விடத் தயார் இல்லை; காரணம் அது பிறந்த போதே உடன் வந்தது. இறைவன் தந்த கொடை.

ஆபத்துக் காலங்களிலும் அது மறைந்து விடாது. கொத்துவதற்குத் தயாராக ஒற்றைக்காலில் நிற்கிற்கிறது கொக்கு; ஆனாலும் சிரித்தபடி வாழ்கிறது மீன். கரையேறி வந்த நண்டு, எப்போது வேண்டும்னாலும் நரிக்கு இரை ஆகலாம். அதனால் என்ன..? சிரித்த படி ஒடுகிறது நண்டு. மனதுக்கு இதமாய் சிரிப்பது போல் சுகம் வேறு உண்டா என்ன..? இன்னலில் இருக்கும் இளம்பெண், சிரிக்கக் கூடாதா என்ன..? 

பெண்ணின் இயல்பான முறுவலுக்கும் கூட அர்த்தங்கள் கற்பிக்கும் சமூகத்தை சாடுவதில் கண்ணதாசனுக்கு ஈடு யார் உண்டு..? 1973இல்' கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளி வந்த படம் - 'அரங்கேற்றம்'. ஏராளமான புதுமுகங்களை வழங்கிய படம். அந்த நாட்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 'மூத்தவள் நீயிருக்க இளையவள் அரங்கேற்றம்..' உள்ளிட்ட பாடல்கள் பிரபலம் ஆயின. இசை அமைப்பு - அமரர் வி.குமார். 

கே.பாலசந்தர் படங்களில் பணியாற்றியவர் - வி.குமார், ஆர்ப்பாட்டம் இல்லாத இதமான மெல்லிசை - இவரது தனிப்பாணி. உதாரணம்: 'காதோடுதான் நான் பாடுவேன்..' (வெள்ளி விழா) இளம் பெண்ணின் துடுக்கான இளமைத் துள்ளலோடு ஒலிக்கிறது பி.சுசீலாவின் குரல். 

பாடல் வரிகள் இதோ:

ஆண்டவனின் தோட்டத்திலே 
அழகு சிரிக்குது. 
ஆகாயம் பூமி எங்கும் 
இளமை சிரிக்குது. 

வேண்டுமட்டும் குலுங்கிக் குலுங்கி 
நானும் சிரிப்பேன். 
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே
விரட்டி அடிப்பேன். 

குழந்தையிலே சிரித்ததுதான் இந்த சிரிப்பு - அதை
குமரிப் பொண்ணு சிரிக்கும்போது என்ன வெறுப்பு?
பொறந்ததுக்கு பரிசு இந்த சிரிப்பு அல்லவா..? இது 
பொணுக்காக இறைவன் வந்த பரிசு அல்லவா..?
பதமா இதமா சிரிச்சா சுகமா 

குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது 
அது கொத்தப் போவதை மறந்து மீனும்சிரிக்குது
குளத்தை விட்டு கரையில் ஏறி நண்டு சிரிக்குது 
அதைக் கொண்டுபோயி உண்டு பார்க்க நரியும் சிரிக்குது. 
பதமா இதமா சிரிச்சா சுகமா..

ஆண்டவனுன் தோட்டத்திலே அழகு சிரிக்குது 
ஆகாயம் பூமிஎங்கும் இளமை சிரிக்குது.

(வளரும்.


- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

இதையும் படியுங்கள்:- 

1.இழந்த சிறகை இணைக்க எண்ணி கைகளை நீட்டிய குழந்தை..!

2.நம்மை அழைக்காத பாடல்...கண்ணை மூடினால், எண்ணம் மறையுமா..?

3.இந்தியத் திருநாட்டின் கலாச்சார அடையாளமாக காற்றினிலே வந்த கீதம் எம்.எஸ்.சுப்புலட்சுமி..!