நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்! லால் சலாமுக்கு வந்த சர்ச்சையால்.. மௌனம் கலைத்த நடிகை தன்யா!
நடிகை தன்யா பாலகிருஷ்ணன் 12 வருடத்திற்கு முன் போட்ட பதிவு, அவருக்கே பாதகமாக மாறிய நிலையில், இது குறித்து 12 வருடத்திற்க்கு பின்னர் மௌனம் கலைத்துள்ளார் தன்யா பாலகிருஷ்ணன்.
![Lal Salaam movie heroine dhanya balakrishna clarification about controversy tweet mma Lal Salaam movie heroine dhanya balakrishna clarification about controversy tweet mma](https://static-ai.asianetnews.com/images/01e1y7evtbht6vcqndh07etr39/d17-jpg_363x203xt.jpg)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லால் சலாம்' திரைப்படத்தில், நடிகை தன்யா பாலகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தமிழர்களை பற்றி தரைகுறைவாக பேசி, ட்வீட் போட்டிருந்த நிலையில் அவரை கதாநாயகியாக நடிக்க வைத்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் இந்த படத்தை வெளியிடமும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், "தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தன்யா பேசியதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் இப்படத்திற்கு தடைவிதிக்க கோரியும், லால் சலாம் கதாநாயகி தன்யா, நடிகர் ரஜினி மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் லைக்கா நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் புகார் அளித்தால் இது படக்குழுவினருக்கு பெரும் தலைவலியாக மாறியது.
இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து... தன்யா பாலகிருஷ்ணன் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்; கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக, நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்.அதையே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்...
அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துர்திர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம், அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான், அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.
ரஜினி - கமலை விட விஜய் எவ்வளவோ மேல்! ஆனால் இது யாருக்கு எதிரான அரசியல்? ப்ளூ சட்டை போட்ட நச் பதிவு!
நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்ததிற்க்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே... அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில், தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.
மனிதாபிமான அடிப்படையிலும், யாரையும் காயப்படுத்தும் விதத்திலும், எந்த சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களிலும், (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை.
சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது..அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த சர்ச்சையினால் திரு. ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும், மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்.
நான் இதை செய்யவில்லை... என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு, உங்கள் முன் இந்த கோரிக்கை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நாள் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.... என்று கூறி அன்புடன் தன்யா பாலகிருஷ்ணன் என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.