அதர்வா முரளி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் 'தணல்' படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!
வணிகரீதியாக அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் நடிகர் அதர்வா முரளியின் அடுத்த படமான 'தணல்' தற்போது வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அதர்வா முரளி, தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். நகர்ப்புற மற்றும் கிராமப்புற படங்கள் என அனைத்து வகையான கதைகளிலும் நடித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒருவராக உள்ளார். 'பட்டத்து அரசன்' படத்தில் இயல்பாக பக்கத்து வீட்டுப்பையன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு தற்போது 'தணல்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர் தயாரிக்கிறார். '100' & 'ட்ரிக்கர்' போன்ற படங்களில் சரியான கதையில் போலீஸ் கதாபாத்திர தோற்றத்திற்காக அதர்வா வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகும் படம்தான் 'தணல்'.
காப் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் 'தணல்' படத்தில், லாவண்யா திரிபாதி கதாநாயகியாகவும், அஷ்வின் காக்குமானு எதிர்மறையான கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஷா ரா, பரணி, செல்வா, அழகம் பெருமாள், போஸ் வெங்கட், லக்ஷ்மி பிரியா, பரத், தௌபிக், சர்வா, பிரதீப் விஜயன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வடிவேலுவை தொடர்ந்து பிரபல காமெடி நடிகர் நடிக்க தடையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு புகார்!
படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் திரையரங்குகளில் படம் வெளியாகும் தேதி போன்றவை அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.