படம் வெளியாகும் போது அவ்வளவு அழுத்தம் இருந்தது! 'மிஷன் சாப்டர்1' வெற்றி விழாவில் அருண் விஜய் உருக்கம்!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' படத்தின் வெற்றிவிழாவில் கலந்து கொண்ட அருண் விஜய் மிகவும் உருக்கமாக பேசி நன்றி கூறினார்.
![actor arun vijay emotinal speech in mission chapter 1 success meet mma actor arun vijay emotinal speech in mission chapter 1 success meet mma](https://static-ai.asianetnews.com/images/01hmc93pn4t7qdw9avtbzg4h1s/gedwtgrxyaenkcy_363x203xt.jpg)
பொங்கல் பண்டிகையில், கேப்டன் மில்லர், அயலான் என்கிற இரண்டு பிக் பட்ஜெட் படங்கள் வெளியான நிலையில், அதற்க்கு போட்டியாக களமிறங்கி சைலண்டாக சம்பவம் செய்து வருகிறது அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம்.
அருண் விஜய் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்துள்ள இந்த படத்தில் நிமிஷா சஜயன் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன், நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றிவிழா இன்று நடந்த நிலையில் அதில் கலந்து கொண்ட அருண் விஜய் பேசியதாவது..
"நல்ல கதையுள்ள படங்களை மக்களும் மீடியாவும் எப்போதும் கைவிட்டதே இல்லை. அதற்காக நன்றி சொல்லும் சந்திப்புதான் இது. ஒவ்வொரு படத்திலும் எனக்கு எதாவது ஒரு பிரச்சினை இருக்கும். இந்தப் படத்திலும் உடல் ரீதியாக நிறைய சவால்கள் இருந்தது. புதுச்சேரி, மதுரை என நாங்கள் போன இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடினார்கள். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.
இதற்கு நான் விஜய் சாருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். இப்படி ஒரு அழகான கதையில் என் பலத்தை அவர் சரியாக உபயோகப்படுத்தியுள்ளார். வரும் வாரத்தில் இந்தப் படத்திற்கு இன்னும் அதிக ஸ்கிரீன் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். படத்திற்கு ஆரம்பத்தில் அதிக பிரச்சினை இருந்தது. ஒரு படத்தை வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதைச் சிறப்பாக செய்திருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் சாருக்கும், தமிழ்க்குமரன் சாருக்கும் நன்றி. 25 கோடி போட்டிருக்கும் இந்த புராஜெக்ட் மீது நம்பிக்கை வைத்த எங்கள் தயாரிப்பாளர்கள் வம்சி, ராஜசேகர் சாருக்கும் நன்றி.
ராமர் கோயில் பிரதிஷ்டை விழா குறித்து பாடகி சித்ரா வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை!
படம் வெளியாகும்போது அவ்வளவு அழுத்தங்கள் இருந்தது. அவை அனைத்தையும் எங்களுக்குத் தராமல் இருந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்த வெற்றி அவர்களைத்தான் சாரும். நீங்கள் தரும் ஆதரவுதான் என்னை புதுப்புது கதைகள் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறது. உங்களை கதையுடன் கனெக்ட் செய்யும் படங்களைத்தான் இனி தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றி. வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ். வரும் நாட்களில் உங்கள் நேரத்திற்கு ஏற்றாற் போல, நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம். நன்றி" என கூறினார்.