அமெரிக்கப் படைகள் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ளன. இதைத் தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) இடைக்கால அதிபராக நியமித்து வெனிசுலா உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் ஆபரேஷன்
சனிக்கிழமை அதிகாலை அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' (Operation Absolute Resolve) என்ற அதிரடி நடவடிக்கையில், அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் மதுரோ இல்லாத சூழலில், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் நிர்வாகத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் டெல்சி ரோட்ரிக்ஸ் அதிபர் பொறுப்பை ஏற்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது. "அதிபர் மதுரோ தற்காலிகமாகப் பணியாற்ற முடியாத நிலையில் இருப்பதால், சட்ட விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது" என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
யார் இந்த டெல்சி ரோட்ரிக்ஸ்?
56 வயதான டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலா அரசியலில் கடந்த பத்தாண்டுகளாக மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறார்:
1970-களில் புரட்சிகர சோசலிசக் கட்சியைத் தொடங்கிய இடதுசாரிப் போராளி ஜார்ஜ் அந்தோனியோ ரோட்ரிக்ஸின் மகள் இவர். காரகாஸில் பிறந்த இவர், வெனிசுலா மத்திய பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.
2013-ல் தகவல் தொடர்பு அமைச்சராகவும், 2014 முதல் 2017 வரை வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 2018 ஜூன் மாதம் மதுரோ இவரை நாட்டின் துணை அதிபராக நியமித்தார்.
நாட்டின் மிக முக்கியமான எண்ணெய் வளத் துறையைக் கவனிக்கும் அமைச்சராகவும், பொருளாதார மேலாண்மை அதிகாரியாகவும் இவர் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் வெனிசுலா தேசிய அவையின் தலைவராக உள்ளார்.
டிரம்ப் vs டெல்சி: மோதல் போக்கு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெல்சி ரோட்ரிக்ஸ் "பதவியேற்றுக்கொண்டார்" என்றும், அவர் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பார் என்றும் கூறியிருந்தார். மேலும், "வெனிசுலாவை இனி அமெரிக்கா வழிநடத்தும்" என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஆனால், டிரம்பின் கருத்தை மறுத்துள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அரசு தொலைக்காட்சியில் உரையாற்றுகையில், "இந்த நாட்டின் ஒரே அதிபர் நிக்கோலஸ் மதுரோ மட்டும்தான். அவரை அமெரிக்கா உடனடியாக விடுவிக்க வேண்டும்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், மதுரோவின் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்பதற்கான 'வாழும் சான்றை' (Proof of life) அமெரிக்கா காட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் அரசியல் மாற்றமும், அமெரிக்காவின் ராணுவத் தலையீடும் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐநா சபை மற்றும் பல நாடுகள் இந்த விவகாரத்தைத் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.


