அமெரிக்காவிற்கு சவால் விடுத்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' என்ற ரகசியத் திட்டத்தின் மூலம் அமெரிக்க சிறப்புப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

நீண்டகாலமாக அமெரிக்காவிற்குச் சவால் விடுத்து வந்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, சனிக்கிழமை நள்ளிரவு அமெரிக்கச் சிறப்புப் படைகளால் (US Special Forces) அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நியூயார்க் நகரத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சவாலும் வீழ்ச்சியும்

கடந்த ஆகஸ்ட் மாதம், தனது தலைக்கு அமெரிக்கா வெகுமதியை அறிவித்தபோது, அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மதுரோ பகிரங்கமாகச் சவால் விடுத்திருந்தார். "தைரியமிருந்தால் மிராஃப்ளோர்ஸ் அரண்மனைக்கு வந்து என்னைப் பிடியுங்கள், கோழையே!" என்று அவர் ஆவேசமாகப் பேசியிருந்தார்.

ஆனால், அவர் சவால் விடுத்த சில மாதங்களிலேயே, அமெரிக்கா 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' (Operation Absolute Resolve) என்ற ரகசியத் திட்டத்தின் மூலம் அவரைச் சிறைபிடித்துள்ளது.

வைரலாகும் வீடியோ

வெள்ளை மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வீடியோவில், மதுரோ முன்பு விடுத்த சவால்களையும், அவர் கைது செய்யப்பட்ட காட்சிகளையும் இணைத்து அவரைப் கேலி செய்துள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், "அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது - அதை அவர் இழக்கும் வரை" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Scroll to load tweet…

தாக்குதல் நடந்தது எப்படி?

அமெரிக்க ராணுவத்தின் புகழ்பெற்ற 'டெல்டா போர்ஸ்' (Delta Force) உள்ளிட்ட உயர்மட்டப் படைகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.

கராகஸில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு கொண்ட 'ஃபோர்ட் தியுனா' (Ft Tiuna) ராணுவ வளாகத்தில் சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்தத் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் தொடங்கிய 30 நிமிடங்களிலேயே அனைத்தும் முடிந்தது. மதுரோ தனது பாதுகாப்பு அறைக்குத் தப்பியோட முயன்றபோது, அமெரிக்கப் படைகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். தற்போது மதுரோவும் அவரது மனைவியும் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பும் திட்டமிடலும்

மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் ஆகஸ்ட் மாதத்திலிருந்தே அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் கண்காணித்து வந்துள்ளன. அவர் எங்குத் தங்குவார், என்ன சாப்பிடுவார், எந்த உடை அணிவார் என்பது வரை துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு முன்பாக, மதுரோ தங்கியிருந்த வீட்டைப் போன்றே ஒரு மாதிரிக் கட்டடத்தை உருவாக்கி அமெரிக்கப் படைகள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டுள்ளன. இந்த முழு நடவடிக்கையையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேரலையில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள்

மதுரோ மற்றும் அவரது மனைவி மீது அமெரிக்கா பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்துகிறது. போதைப்பொருள் பயங்கரவாதம், அமெரிக்காவிற்குள் டன் கணக்கில் கோகோயின் கடத்தியது, சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறுகிறது.